Friday, September 11, 2015

இந்தியை ஆதரிப்பேன்- சிறுகதை

    அந்த இளைஞன் திராவிடக் கட்சிகளின் மீது கடும் கோபம் கொண்டிருந்தான். ஏனென்றால் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து, திராவிடக் கட்சிகள் செய்த போராட்டங்களால் இந்தி மொழி இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து விரட்டப்பட்டதேயாகும். அதன் விளைவாக அந்த இளைஞனால் இந்தி படிக்க முடியவில்லை, அதனால் அவனால் இந்தி பேசுகின்ற மாநிலங்களுக்குள் சென்று விட்டு, மகிழ்ச்சியாகத் திரும்பி வர முடியவில்லை. இந்தி பேசத் தெரியாதவன் என்ற ஏளனத்தோடு மட்டுமே அவனை இந்தி பேசுகிற மக்கள் பார்த்திருக்கிறார்கள். இது அந்த இளைஞனுக்கு பெரும் அவமானமாக இருந்து வந்தது. அதனால் இந்தியை பள்ளிப் பாடங்களில் நுழைய விடாமல் தடுத்த திராவிடக் கட்சிகளின் மீது அவனுக்கு கடுங்கோபமும் ஆதங்கமும் இருந்து கொண்டே வந்தது.

   இந்திக்கேற்றார்போல ஒரு அரசாங்கம் இந்திய நாட்டில் அமைந்தது. அவனுக்குப் பெரும் மகிழ்ச்சி உண்டானது.திராவிடக் கட்சிகள் எவ்வளவோ எதிர்த்தும் இந்தி இந்தியாவில் உள்ள அத்தனை பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. இந்தப் போரில் திராவிடக் கட்சிகள் தோற்றுப் போனது,
இந்தி வென்றது.
இந்தியை விரும்பிய அந்த இளைஞனுக்குத் திருமணமானது. திருமணமான மூன்றாண்டுகளுக்குள் ஆணொன்றும் பெண்ணொன்றுமாய் இரண்டு குழந்தைகளை முத்தாய்ப்பாய்ப் பெற்றெடுத்தாள், அவன் மனைவி. குழந்தைகள் பெரிதாகின. பள்ளி செல்லும் பருவத்ததைத் தொட்டன. அரசுப் பள்ளியிலே போய்ச் சேர்த்தான்.

      அவனுக்கு இப்போது விண்ணை முட்டுகின்றளவிற்குப் பெருமகிழ்ச்சி. தான் படிக்காத இந்தி, தான் அவமானப்படுவதற்குக் காரணமான இந்தி மொழி தன் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. பிள்ளைகள் அப்பா என்று அழைப்பமற்குப் பதில் "பிதாஜி" என்று அழைத்தார்கள். அவனுக்கு மகிழ்ச்சி கொள்ளவில்லை. அவன் ஊரில் இருந்த திராவிடக் கட்சியினரைப் பார்த்து கடிந்து கொண்டு வந்தான். தன் பிள்ளைகள் இந்தி பேசுவதை அவர்களிடம் தூக்கிக் கொண்டுபோய்க் காட்டி மகிழ்ச்சி அடைந்தான்.
பிள்ளைகள் பள்ளிப் படிப்பை முடித்தன. அந்த நேரத்தில் இந்தி இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கட்டாய மொழியாக்கப்பட்டு கிட்டத்தட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளைத் தொட்டிருந்தன. பள்ளியில் மட்டுமே கொண்டு வந்திருந்த இந்தி, அந்த நேரத்தில் ஆட்சி மொழியாக்கப்பட்டு இருந்தது. ஆங்கிலம் இரண்டாம் இடத்தில் தாய்மொழி மூன்றாம் இடத்திலும் இருந்தது. அவன் வீட்டு தொலைபேசி இணைப்பைச் சரிசெய்யக் கூட அப்போது இந்தியில் தான் பி.எஸ்.என்.எல் அலுவலகத்துக்குக் கடிதம் எழுதவேண்டும் என்கின்ற அளவிற்கு இந்தி பெரும் வளர்ச்சி அடைந்திருந்தது. அவரும் தன் பிள்ளைகள் இந்தியில் கடிதம் எழுதுவதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியில் திழைத்தார்.

    தன் பிள்ளைகளுக்கு இந்தி தெரியும், அவர்களை எப்படியாவது மத்திய அரசுப் பணியில் அமர்த்திட வேண்டும் என்றெண்ணம் கொண்டு தன் பிள்ளைகளை மத்திய அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வைத்தான். தேர்விற்கு இந்தி மொழியிலே நன்றாகப் படித்தார்கள். தேர்வெழுதினார்கள் தேர்ச்சி பெறவில்லை. அடுத்த தேர்வில் பார்ப்போம் என்று அடுத்து எழுதினார்கள் அதிலும் தேர்ச்சி பெறவில்லை. பத்துக்கும் மேற்பட்ட தேர்வெழுதி, ஒவ்வொன்றிலும் தோல்வியே மிச்சமானது.
அவர்களோடு படித்த அத்தனை மாணவர்களுமே, தோல்வியைத் தான் சந்தித்தார்களே தவிர, யாரேனும் ஒருவராவது வெற்றி பெற்றிருக்கிறார்களா என்று சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தாலும் யாரும் சல்லடையில் நிற்கவில்லை. ஆனால் அதற்கு நேர்மாறாக இந்தி பேசுகின்ற மாநிலத்து மாணவர்கள் எல்லாம் வெற்றியைக் குவித்து வேலைகளில் சேர்ந்து சம்பளங்களைக் குவிக்கலாயினர். ஆனால் அவருடைய பிள்ளைகள் தேர்வை மட்டும் தான் எழுதிக் கொண்டிருந்தார்கள் தேர்ச்சி பெற முடியவே இல்லை.

    வடமாநிலத்துப் பிள்ளைகள் எல்லாம் தேர்ச்சி பெறுகின்றனரே, தம் மாநிலத்துப் பிள்ளைகளால் மட்டும் ஏன் அதிகம் தேர்ச்சி பெற முடியவில்லை என சிந்திக்கத் தொடங்கினான். அப்போது தான் அவனுடைய முடங்கிக் கிடந்த மூளை முழிக்கத் தொடங்கியது.
தம் பிள்ளைகள் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களோடு போட்டியிட்டால் எப்படி வெற்றி பெற முடியும், முடியாது தானே,. என்னதான் இருந்தாலும் நம் பிள்ளைகளுக்கு இந்தி எடுப்பு மொழி தானே, என்று எண்ணலானான்.

   இந்தி ஆட்சி மொழியாக்கப்பட்ட போது அடைந்த சந்தோசத்தை எண்ணி பெரும் துன்புற்றார். திராவிடக் கட்சிகளை இழிவாகப் பேசியதை நினைத்து வருந்தினார். இதற்கொரு முடிவுகட்ட முன் வந்தார்.

     தன் பிள்ளைகளுக்கு 1960 களில் நடந்த மொழிப்போர் குறித்த வரலாறுகளைத் தேடி எடுத்துக் கொடுத்தார். அவர்களும் இந்தியை எதிர்க்கத் துணிந்தார்கள். தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும், ஏன் ராசாசியும் கூட இந்தியை எதிர்த்துப் பேசிய பேச்சுக்களைத் தொகுத்தார்கள் மாணவர்கள்.
  
   "இந்தியை விரட்டுவோம்" இந்தியை விரட்டுவோம்" என்ற குரல் இந்தி பேசாத மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் ஒலிக்கத் தொடங்கியது. இந்திக்கு எதிராக பெரும் போர் மூண்டது. மாணவர்கள் மத்தியில் இன்னொரு அண்ணாவும், இன்னொரு கலைஞரும், இன்னொரு கோபால்சாமியும், இன்னொரு பே.சீனிவாசனும் புடம்போடப்பட்டார்கள்.

    இறுதியில் இந்தி மொழி இந்தி பேசாத பிற மாநிலங்களில் இருந்து திரும்பப் பெறப்பட்டது.
ஆட்சி மொழியாக்கப்பட்டதற்கும், திரும்பப் பெறப்பட்டதற்கும் இடையேயுள்ள ஒரு தலைமுறை மத்திய அரசுகளில் காலூன்ற முடியாமல் போனது. இந்தியைக் கொண்டு வந்த போது மகிழ்ந்த இளைஞனும் வயதில் முதிர்ச்சியாகி மரித்துப் போயிருந்தார்.
அப்போது ஆண்டு "2060" ஆக வளர்ந்திருந்தது.

Tuesday, June 2, 2015

தொண்டர்களின் ஒப்புயர்விலா தலைவர் அவர்

என்னுடைய வயது என்ன என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் என நினைக்கிறேன். உங்களுக்காக வேண்டுமானால் இன்னொரு முறை இங்கே நினைவுப்படுத்துகிறேன். அதாவது இன்னும் ஒரு நான்கு மாதங்களில் இருபத்தைந்தைத் தொடுகிறேன். இந்தச் சின்ன வயது தான் எனக்கு. நான் ஒன்றும் பெரிய வயதினன் இல்லை.

   என்னைச் சுற்றி பண பலமோ அரசியல் பலமோ ஆள் பலமோ என எதுவுமே இதுவரை இருந்ததில்லை. ஒரு சின்ன உர அங்காடியில் இந்த ராசபாளையம் நகரத்தின் ஒரு மூலையில் பகல் நேரங்களில் மூடை தூக்கியதில் கரை தோய்ந்த  ஒரு பழைய சட்டையுடனும் பல நேரங்களில் காலில் செறுப்பு கூட போடாமல் சைக்கிளில் நகரத்து வீதிகளில் அவ்வப்போது சுற்றிக் கொண்டிருக்கும் பணியினைச் செய்து கொண்டிருக்கும் எனக்கு அப்படியென்ன ஆள் பலம் இருக்கும் என்பதை நீங்களே எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    முகநூலில் தி.மு.க விற்காக பதிவுகள் போடுவதும், அவ்வப்போது வாய்ப்புள்ள  (வேலையில் விடுப்பு கிடைக்கின்ற) நேரங்களில் கழகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், அதற்காக என்னாலான பணியினைச் செய்வதும், எங்கள் சொக்கநாதன்புத்தூர் கிளைக் கழகத்தில் ஒரு துடிப்புமிக்க தி.மு.க கார இளைஞனாக வலம் வருவதும் தான் கழகத்திற்காக நான் செய்த பணிகள் என்றாலுங் கூட, என்னுடைய தாயும் தந்தையும் தி.மு.க விற்காக பல காலங்கள் உழைத்திருக்கிறார்கள், உழைக்கிறார்கள், உழைப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்களுடைய வளர்ப்பு தான் என்னை தி.மு.கழகத்தின் துடிப்புமிக்க இளைஞனாக வலம்வரச் செய்திருக்கிறது.

   இதுதான் நா(ங்கள்)ன் கழகத்திற்காக செய்த அளப்பரிய பணிகள் என்றால் அது மிகையாகாது. இதன் விளைவாக என்னுடைய தாயார் மட்டும் இராசை, ஒன்றிய கழகத்தின் சில பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தான் எங்கள் குடும்பத்தினை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரே தகுதி.

  இதையெல்லாம் தேவையில்லாத நேரத்தில் ஏன் இப்படிக் கதை விட்டுக் கொண்டிருக்கிறான் என்று நீங்கள் நினைப்பதற்குள் நான் விசயத்திற்கு வருகிறேன்.

   இப்படிப் பட்ட சூழ்நிலையில் வளர்ந்த நான்,   கடந்த செப் 13 அன்று என்னுடைய இருபத்தி நான்காம் பிறந்த நாளில் எப்படியேனும் தலைவர் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரோடு நின்று ஒரு புகைப்படம் எடுத்து வீட்டில் பெரிதாக பிரேம் போட்டு மாட்டவேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தோடு சென்னைக்குச் சென்றேன். போறது தான் போறோம்,,
அப்படியே இணையதள நண்பர்கள் சார்பாக கலைஞரின் பிறந்த நாளையொட்டி  நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற என்னுடைய கட்டுரையையும் தலைவர் கலைஞரிடம் சமர்ப்பித்து விடுவோம் என்று அதையும் எடுத்துச் சென்றிருந்தேன். கட்டுரைப் போட்டியினை நடத்தியவர்களோ பரிசு வழங்கியவர்களோ கூட தி.மு.க. வின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களோ, பிரபலமானவர்களோ கிடையாது அவர்களும் என்னைப் போன்ற எளிய தொண்டர்கள் தான்.

       ஆக, கலைஞரைச் சந்திக்க கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று விட்டேன். உடன் நம் கழக நண்பர்கள் தாம்பரம் சதீஸ், சிவகிரி தனுஷ்குமரன், சிவகாசியில் இருந்து ஒரு நண்பரென மொத்தம் நான்கு பேர் சென்றிருந்தோம். நாங்கள் சென்றவுடன் யார் நீங்க? யாரப் பாக்கனும் என வினவிக் கொண்டு கோபாலபுரத்துக் காவலாளி ஓடி வந்தார். நான் உடனே, பேஸ்புக்கில் தி.மு.க சார்பாக எழுதுகிறேன். இன்று எனக்குப் பிறந்த நாள் ஆதலால் தலைவரிடம் வாழ்த்துப் பெற வேண்டும் என்றேன்.

   உடனே, என்னுடைய பெயரைக் குறித்துக் கொண்டு, தலைவர் அனுமதி கொடுத்தால், யாராவது இரண்டு பேர் மட்டும் தான் உள்ளே வரவேண்டும் என்றார். எனக்குத் தலைவர் அழைப்பாரா,, அழைக்கமாட்டாரா,, என்கின்ற சந்தேகம் வேறு உறுத்திக் கொண்டே இருந்தது. ஏனெனில் எங்களுக்கு முன்னே ஒரு ஐம்பது பேர் வரைக்கும் அங்கே தலைவர் கலைஞரைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தனர். அவர்கள் எல்லாம் ஏதோ முக்கிய நிர்வாகிகள் போல அவர்களுடைய தோரணையிலே தெரியவந்தது. ஆதலால் அவர்களை மட்டும் தான் சந்திப்பாரோ, நம்மைச் சந்திக்கமாட்டாரோ என்று உடன் வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், தலைவர் வருகைக்கான செய்கைகள் தெரிந்தது. காவலாளிகள் அங்குமிங்கும் ஓடினர். பரபரப்பு தொற்றியது  கலைஞர் வந்து விட்டார்.
 
   எங்களுக்கு முன்னே குழுமியிருந்தவர்களில் இருவரை மட்டும் உள்ளே அழைத்திருப்பார் போல, அவர்கள் உள்ளே சென்றனர்.

    அடுத்து, உள்ளே இருந்து ஒரு குரல் "சீத்தாராமன்" என்றதும் ஓடினேன். என் உயிரான தலைவர் கலைஞரைப் பார்க்க ஓடினேன். எனக்கெல்லாம் இந்த வாய்ப்பு கிடைக்குமாயென்று பல நாட்கள் ஏங்கித் தவித்ததுண்டு. அதனால் தானோ என்னவோ இந்த வரிகளை எழுதுகையில் என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்குகிறது.

   தலைவர் கலைஞரின் அருகே நிற்க வைக்கப்பட்டேன். என்னை ஏறிட்டுப் பார்த்தார். பக்கத்தில் சென்றேன். "அய்யா எனக்குப் பிறந்த நாள்" என்றேன்.

  "வாப்பா, பிறந்த நாளா" என்றார் தலைவர் கலைஞர்.

    ஆமாம், என்று சொல்லி காலைத் தொட்டு வணங்கி, கையிலே வைத்திருந்த பழத் தட்டை பக்கத்திலே நின்ற உதவியாளர் வாங்க, கையிலே வைத்திருந்த கட்டுரையை "அய்யா, இது நான் உங்களைப் பற்றி எழுதி முதல் பரிசு பெற்ற கட்டுரை" என்றேன்.

   தன் கையிலே வாங்கிய கலைஞர், அதன் அத்தனை பக்கங்களையும் புரட்டிப் பார்த்து விட்டு, என்னை அண்ணாந்து பார்த்து தன் உதட்டை மடித்து பற்களுக்குக் கீழே வைத்துக் கொண்டு, "உச்" என்று ஒரு சத்தமிட்டார் பாருங்கள், அப்போதே என் உயிர் பிரிந்து விட்டது. இப்போதெல்லாம் நான் வெறும் பிணம் தான், அந்தத் தருணம் எனக்கு அப்படியொரு அளப்பரிய மகிழ்ச்சியைத் தந்தது.

   கலைஞர் என்பவர் சாதாரண மனிதரல்ல. தமிழக அரசியல் வரலாற்றினுடைய முக்கால் நூற்றாண்டு கால வரலாறு. அன்றைய தினம் அவர் இந்த எளிய தொண்டனைச் சந்திக்க மறுத்திருந்தால் கூட, நான் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டேன். சிங்கத்தை அதன் குகைக்குள் போய் பார்த்து விட்டோம் என்ற மகிழ்ச்சியோடு திரும்பியிருப்பேன். அதைக் கூட விட்டு விடலாம். நான் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு என்றதும், அதை விரித்துப் படித்துப் பார்த்தார் பார்த்தீர்களா! அது தான் அந்த நொடியில் நான் வியந்து நின்ற ஒன்று. என்னுடைய தகுதிக்கு நானெல்லாம் எழுதிய கட்டுரையை அவர் அப்படியே தன்னுடைய உதவியாளரிடம் கொடுத்து ஒரு மூலையோரத்தில் வைத்து விடுவார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் கலைஞர் அப்படிச் செய்யவில்லை. அவருக்கிருக்கின்ற வேலைப்பாடுகளில் அதையும் விரித்துப் படித்து, அவர் விழியசைவால் என்னை வாழ்த்தினார் பார்த்தீர்களா!

  "இவர் தான் கலைஞர். இவர் தான் தொண்டர்களின் ஒப்பற்ற தலைவர்"

  இந்த ஒற்றை உணர்விற்காகவே, என் வம்சம் முழுதும் கலைஞர் தான் எங்கள் தலைவர் எனக் கூவி, கருப்புசிவப்புக் கொடி பிடித்துக் கலைஞர் வாழ்க எனக் குரலெழுப்பும்.

    93 வயதிலும் தான் ஏறிப்பார்க்காத உயரமே இல்லை எனும் புகழைக் கொண்ட ஒரு தலைவர், 24 வயது சின்னக் கடைக்கோடித் தொண்டனுக்கும் இவ்வளவு பெரிய சகாப்தத்தைத் தர முடிகிறதென்றால் அது உலக வரலாற்றில் திராவிடப் பெருந்தலைவர் கலைஞரைத் தவிர  எவராலும் முடியாது.

   பெரியாருக்குப் பின்னால் அவர் இடத்தை பேரறிஞர் அண்ணா பூர்த்தி செய்தார். அண்ணாவிற்குப் பின்னால் அவர் இடத்தை திராவிடப் பெருந்தலைவர் கலைஞர் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கலைஞருக்குப் பின்னால் அவருடைய
வெற்றிடம் தான்.  தலைவனாகப்பட்டவன் இப்படித் தான் வாழவேண்டும் என்பதற்கு கலைஞர் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

    92 ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கிற கலைஞரே, என் குடும்பத்தின் ஆயுளில் ஒரு கால் பங்கைத் தருகிறேன் எடுத்துக் கொள்ளும். இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்!!

   வாழ்க கலைஞர்!!
   வாழ்க கலைஞர்!!
   ஓங்குக கலைஞர் புகழ்!!

Wednesday, April 8, 2015

நாகூர் ஹனீபா புகழ் ஓங்கட்டும்!!

இன்று முழக்குவது போல் இசையொலியை அன்று முதல் அழைக்காமலே வந்து,, என்றவுடன் கூட்டத்தில் சிரிப்பொலி ஆர்ப்பரிக்கிறது,, இசை முரசைத் தரவிருக்கும் நாகூர் ஹனீபா வுக்கும் வணக்கம் என தலைவர் கலைஞர் அவர்களின் இளங்கால பேச்சொன்றிலே கேட்கின்ற போது அய்யா ஹனீபா அவர்கள் மீது அவர் பாடிய பாடல்களைக் கேட்ட போதெல்லாம் வராத பாச உணர்வு அதைக்கேட்டது முதல் மேலோங்கியது.

   திருச்சி மாநாட்டிலே கொட்டித் தீர்த்த மழையில் வெள்ளக்காடாய்க் கிடந்த மாநாட்டுப் பந்தலுக்குள் கலைஞர் தன் வேட்டியை முழங்காலுக்கு மேலே ஏற்றிக் கட்டி வீறு நடை போட்டு வந்த போது தான் ஹனீபா "ஓடி வருகிறார் உதயசூரியன், எந்தன் உள்ளமெல்லாம் கொள்ளை போகவே ஓடி வருகிறார் உதயசூரியன்" என்று பாடலை முதன் முதலாகப் பாடிய போது ஒட்ட மொத்த மாநாட்டுப் பந்தலும் ஆர்ப்பரித்துப் போனதாய் எங்களூர்க் கழகத்தவரொருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

  இப்போதும் எங்கள் ஊர் கழக நிகழ்வுகளில், ஓடி வருகிறார் உதயசூரியன்,  உடன் பிறப்பே ஓடி வா,, ஆறிலும் சாவு நூறிலும் சாவு,, அண்ணா என்பதும் ஒருவரைத் தான், கற்பூரக் கனல் வார்த்தைக் கலைஞர் சொல்லட்டும் போன்ற பாடல்களை ஒலிபெருக்கியிலே ஒலிக்கவிட்டு, தெருவிலே வெள்ளுடை உடுத்தி வீராப்பு நடை போட்டு வருகின்ற போது எனக்கு கிடைக்கின்ற உற்சாகம் கழகத்தின் வேறெதிலும் கிடைப்பதில்லை.

     அதே போல, என்னைக் கவர்ந்த ஹனீபா வின் இன்னொரு பாடல் "இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை, என்ற பாடல் நான் என்னுடைய எட்டாம் வகுப்பை கோவில்பட்டி அருகே உள்ள சில்லாங்குளம் முத்துக்கருப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்ற ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கெல்லாம், குளித்துவிட்டு மைதானத்தில் வரிசையில் அனைவரும் ஒரு சேர வழிபாட்டுப் பாடலாக பாடிய பாடல் என்னை சிறுவயதிலேயே மிகவும் கவர்ந்தது. இன்னமும் அந்தப் பாடலை எங்கேனும் கேட்டால் எனக்கு அப்பள்ளியின் நினைவுகள் நிழலாடத் துவங்கி விடும்.

  இச்சீர் மிகு ரசிப்புத் தன்மை கொண்ட கழகப் பாடல்களையும், இறைவணக்கப் பாடல்களையும் பாடிய ஹனீபா வின் உடல் மறைந்து விட்டது. மறைந்தாலும் தன் பாடல்களின் மூலம் நீங்காப் புகழ் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசன், வாலியைப் போல அவரும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.

   சிம்மக்குரலோன் நாகூர் ஹனீபா புகழ் ஓங்கட்டும்.

Saturday, April 4, 2015

நடப்பது ஆட்சியல்ல, காட்சியே!!

கடந்த டிசம்பர் மாதம் இருபதாம் தேதி காலை பத்து மணிக்கு கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இராசபாளையம் திருவள்ளுவர் நகரைச் சார்ந்த சங்கர் என்பவரின் மகள் ஹன்சினி தனியார் மருத்துவமனை ஒன்றிலே அனுமதிக்கப்பட்டு உயிர் பிரிந்த போது, இராசபாளையத்தில் டெங்குக் காய்ச்சல் பரவியிருக்கிறதென்பதும், அதைத் தொடர்ந்து இருபத்தைந்துக்கும் அதிகமான குழந்தைகள் இறக்கப் போகின்றனர் என்பதும் இராசபாளையத்தில் வாழ்கின்ற எந்த மக்களுமே நினைத்துக் கூட பார்க்காத ஒன்று தான்.

Rajapalayam Dengueஅந்தக் குழந்தை இறந்த இரண்டாவது நாள் தான் தி இந்து நாளிதழில் "இராசபாளையத்தில் மர்மக்காய்ச்சல் குழந்தை பலி" என்ற தலையங்கத்தில் வந்த செய்தியைப் படித்த போது தான் அனைவருக்கும் கொஞ்சம் அச்சம் ஏற்பட்டது. அந்த செய்தி வந்த அதே நாளில் சத்திரப்பட்டி ரோடு ரயில்வே கேட் அருகே, ஒரு குடும்பம் இறந்த குழந்தையோடு சாலை மறியல் செய்த போது தான் ராசபாளையத்தில் என்ன நடக்கிறது என அனைவரும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கத் தொடங்கினோம்.

அதே வாரத்தில் மூன்று குழந்தைகள் பலியாயினர். இப்படியாகப் பலியாகிக் கொண்டிருந்த குழந்தைகளின் எண்ணிக்கை இருபத்தைந்தைத் தொட்டு இராசபாளையத்தையும் அதன் சுற்று வட்டார கிராம மக்களையும் நிலைகுலையச் செய்து விட்டது இந்த டெங்குக் காய்ச்சல்.

இராசபாளையத்தில் டெங்குக் காய்ச்சல் பரவுவதற்கான காரணமென்ன என ஆராய்ந்தோமேயானால், அங்கே முழுக்க முழுக்க குற்றவாளியாக நிற்பது இராசபாளையம் நகராட்சியும் அதன் நிர்வாகமும் தான். நகராட்சியின் நீர்நிலைத் தொட்டிகளை சரிவர சுத்தப்படுத்தாமையும், இராசபாளையத்திற்கு மேற்கே அய்யனார் கோவில் பகுதியில் இராசபாளையம் நகர முழுமைக்கும் குடிநீர் ஆதாராமாக விளங்கக் கூடிய நீர்த்தேக்கத்தை சரிவரப் பராமரிக்கமல் இருந்ததுமேயாகும். இன்னொன்றையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். திருவள்ளுவர் நகரைச் சார்ந்த ஹன்சினி என்ற டெங்குவிற்குப் பலியான குழந்தையின் வீட்டின் முன்னால் உள்ள விளையாட்டு மைதானம் முழுமைக்கும் பார்த்தீனியச் செடிகள் முளைத்து, பகல் பனிரெண்டு மணிக்குக் கூட பயங்கரமான கொசுத் தொல்லை இருந்தும் அதைப் பராமரிக்காமல் விட்டு விட்ட பினாமி அ.தி.மு.க அரசு நிர்வாகம் மட்டுமே இதற்கு முழுக் காரணமாகும்.

இப்படித் தொடர்ந்து குழந்தைகள் இறந்து கொண்டிருந்த போது, இந்த மாவட்டத்திலும் பினாமி அ.தி.மு.க அரசின் இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றார்களே, இந்தத் தொகுதிக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறாரே, அவர்களெல்லாம் எங்கே சென்றார்கள் என உங்களுக்கு ஏற்படக் கூடிய ஐயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினரும் ஆறு குழந்தைகள் இறந்து முடிந்திருந்த வேளையில், இதையெல்லாம் துளி கூட கண்டு கொள்ளாமல், தேவதானத்திலே உள்ள பெத்தனாட்சியம்மன் கோவிலுக்குத் தொண்டர்களுடன் பாலாபிசேகமும் பட்டாபிசேகமும் சிறப்பு வேள்வி பூஜையும் செய்து, சொத்துக் குவிப்பு வழக்கிலே பெங்களூர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, நூறுகோடி ரூபாய் அபராதமும் நான்காண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்ட ஜெயலலிதா விடுதலை பெற்று, மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வேண்டுமென்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அடடே,, என்னே அமைச்சர்களின் பணியென்று நீங்கள் வியந்து பாராட்டுவீர்களென நினைக்கிறேன்.

மடிகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருந்தது. ஒரு நாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இராசபாளையத்திற்கு வந்தார். அ.தி.மு.க வின் கொடி பறக்கும் கார்களின் எண்ணிக்கை இராசபாளையத்தில் அதிகமானது. நாங்கள் எல்லாம் இங்கே தான் இருக்கிறோம் தயவு செய்து பயப்படாதீர்கள் உங்கள் குழந்தைகள் இறந்து போனால், அதற்கு அரசாங்கத்தில் இருந்து நிதி கொடுத்து விடுவோம் என்கின்ற ரீதியாக கொசுவை ஒழிப்பதற்கும் மருத்துவ வசதியினை மேம்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை துரிதப்படுத்தாமல், ஊர்வலம் போகத் தொடங்கினர். அய்யோ அமைச்சர்களல்லாவா வருகிறார்களென டெங்குக் கொசுக்கள் ஓடி ஒளிந்து கொள்ளுமா என்ன? ஆனால் எத்தனை இறந்த குழந்தைகளின் குடும்பங்கள் அரசாங்க இழப்பீட்டு நிதியைப் பெற்றிருக்கின்றனர் என்பது முயலுக்குக் கொம்பு முளைத்த கதை தான்.

அதே போல இராசபாளையத்திலே உள்ள அதிகாரிகளும் அலுவலர்களும் மருத்துவர்களும் வேகமாக இயங்கத் தொடங்கினர். இராட்சத கிரேன் இயந்திரங்களைக் கொண்டு நகரின் பிரதான சாலைகளிலும், மக்கள் அதிகம் நடமாடும் வீதிகளிலும் உள்ள சாக்கடைக் கழிவுகளும், குப்பைகளும் அகற்றப்பட்டன. இப்படிச் செய்யப்பட்ட வேலைகளினால் ஒரே வாரத்தில் இராசபாளையம் நகராட்சியில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரக் கணக்கான மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டிருக்கிறது. இந்த ஒரு தகவலிலிருந்தே நகராட்சி நிர்வாகம் கடந்த மூன்றரையாண்டுகளாக எப்படிச் செயல்பட்டிருக்கிறது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். ஆனால் இந்தப் பணிகளினால் நகர் முழுவதும் ஐம்பது சதிவிகிதமே சுகாதாரம் செய்யப்பட்டிருக்கிறது என்றொரு தகவல் நகரமக்களிடம் இருந்து வந்து கொண்டே தான் இருக்கிறது.

வேலைகள் தான் முடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதே, உயர்ந்த மருத்துவக் குழுக்கள் எங்கள் நகருக்கு வந்து விட்டதே, இறப்புக்களின் எண்ணிக்கை குறைந்ததாயென்றால், பதிமூன்று பதினைந்தானது . பதினைந்து பதினெட்டானது, பதினெட்டு இருபத்தி இரண்டு ஆனது.

இவையெல்லாம் அரசு மருத்துவமனை சொல்கின்ற கணக்குகளே. இது போக தனியார் மருத்துவமனைக்குச் சென்று அங்கே மடிந்து போன பிஞ்சுகளின் பெயர்களெல்லாம் இங்கே கணக்கில் இல்லை.

மக்களும் ஒரு புறம் தங்களின் எதிர்ப்புகளை மிகக் கடுமையாகப் பதிவு செய்து கொண்டே இருந்தனர். இப்படியாக இராசபாளையம் சங்கரன் கோவில் முக்கு பகுதியில் இறந்த குழந்தையின் உறவினர்கள் செய்த சாலை மறியலில் போலிஸ்காரர்கள் பெண்களின் பிடரியைப் பிடித்து இழுத்து அடித்ததும், அதைப் பார்த்து கொந்தளித்துப் போன இளைஞரொருவர் தெற்குக் காவல் நிலைய இன்ஸ்பெக்டரை சட்டையைப் பிடித்து அடிக்கப் பாய்ந்ததும், அந்த இளைஞரை காவல் துறையினர் நைய்யப் புடைத்ததும் அனைவரும் அறிந்ததே.

பின்பொரு நாள் யூனியன் அலுவலகம் அருகே தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் ஒன்று கூடி நகரமே திரும்பிப் பார்க்கின்ற வண்ணம் மாபெரும் சாலை மறியலொன்றை இயங்கயியலாத பினாமி அரசாங்கத்தைக் கண்டித்து செய்து, இதனால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுக் கிடந்ததென்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் இதைச் செய்தியாக்காமல் மூடி மறைத்து அரசாங்கத்திற்குப் பெரும்துணையாக இருக்கும் ஊடகங்கள் தங்கள் நடுநிலையின் நிலையை அனைவரும் அறியும் வண்ணம் நடந்து கொண்டது தனிக்கதை.

இறுதியில் குளிர்பனியின் தாக்கம் குறைந்து போனதால் டெங்குக் காய்ச்சலின் வீரியமும் குறைந்து போனது. டெங்குக் காய்ச்சல் என்பது ஒரு சீசன் போல வந்து போன பின்னர் இங்கே வைரஸ் காய்ச்சல் தொற்றிக் கொண்டது.

வைரஸ் காய்ச்சலுக்கும் டெங்குக் காய்ச்சலுக்கும் உரிய உயர்தர மருத்துவத்தைத் தராமல், இராசபாளையம் காந்தி சிலை அருகே உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையை வெள்ளையடித்து, வண்ண அலங்கார விளக்குகள் தொங்க விட்டு, வண்ணக் கொடிகள் அழகாக பறக்க விட்டு, இன்னும் சொல்லப் போனால் அலங்காரத் தோரணைத் துணிகளையும் கூட தொங்க விட்டு அரசு மருத்துவமனையை அலங்கார மருத்துவமனையாக, ஏதோ கல்யாண வீடு போல ஆக்கி வைத்திருக்கிறார்கள்.

தமிழக அரசாங்க வரலாற்றிலே முதல்முறையாக இருபத்தைந்துக்கும் அதிகமான குழந்தைகளைப் பலி கொண்ட, காப்பாற்ற இயலாத அரசு மருத்துவனை இவ்வளவு அலங்காரம் செய்யப்பட்டிருப்பதேன்???

நாங்கள் சிறப்பாகத் தான் செயல்பட்டிருக்கிறோம். இங்கே வந்த எல்லாக் குழந்தைகளும் காப்பாற்றப்பட்டு விட்டனர். ஆக நாங்கள் நல்லாட்சி தான் நடத்திக்கொண்டிருக்கிறோம், பார்த்தீர்களா,, அரசு மருத்துவமனை எவ்வளவு அலங்காரமாக ஜொலிக்கிறது என்று காட்சிப்படுத்த மட்டுமே இப்படி அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்த ராசபாளையம் மக்களை அ.தி.மு.க அரசாங்கம் எவ்வளவு முட்டாளாக்குகிறது பார்த்தீர்களா!!

இதுதான் அ.தி.மு.க அரசாங்கத்தின் இன்றைய லட்சணம். உரிய மருத்துவத்தைக் கொடுத்து நோயாளியாகிக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றுவதை விட்டு, இப்படியெல்லாம் மருத்துவமனையை அலங்காரம் செய்து, மக்களை மனநோயாளியாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல பிரச்னைகளுக்கான தீர்வுகள் இப்படியே காட்சிப்படுத்தப்படுகின்றன. முறையான உரிய தீர்வுகள் இல்லை. நடப்பது ஆட்சியல்ல, வெறும் காட்சி தான் என்பது இந்த ஒரு விசயத்தில் இருந்தே தமிழ்நாட்டு மக்களுக்குப் புலப்படுமென உறுதியாக நம்புகிறேன்.

மாற்றங் காண வேண்டியது மக்கள் கையில் தான் உள்ளது.