Wednesday, November 26, 2014

சீமானும் வரலாறும்

   தமிழ்நாஜிக்களின் தலைவன் சீமான் பேசிய காணொளி ஒன்றைக் காணநேரிட்டது.
   அதிலே சீமான் பேசுகின்ற போது ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாஞப் பண்டிதர், வேலுநாச்சியார், கட்டபொம்மன், வீரன் அழகுமுத்து, தீரன் சின்னமலை ஆகியோர் எனது தமிழப்பாட்டன்கள் என்றும், அவர்களையெல்லாம் அந்தந்த சாதிகளிடம் இருந்து மீட்பது தான் எங்களுடைய முதல் பணி என்றும் பேசியிருந்தார்.
     முதலில் மேற்சொன்ன மாவீரர்களில் எத்தனை பேர் தமிழர்கள் என்பதை அறிந்து விட்டாவது, அவர் "என் தமிழ்ப்பாட்டன்கள்" என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, மாவீரன் அழகுமுத்துவின் வரலாற்றை படித்துப் பார்த்தவன் என்கின்ற முறையில், அவர் பற்றி இங்கே பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
    மாவீரன் அழகுமுத்து விஜயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த "யது குல"த்தைச் சார்ந்தவர். அவர்கள் கண்ணனையும், பெருமாளையும் தங்களின் வழிபாட்டுத் தெய்வங்களாக வணங்கி வந்தனர். பின்னர் விஜயநகரப் பேரரசு அழிந்த உடன், அங்கிருந்து  தங்களின் குடிகளை இடம்பெயர்த்துக் கொண்டு விஜயநகரப் பேரரசின் கீழ் வாழ்ந்த மக்கள் அனைவரும், தென்பகுதியை (தற்போதைய தென்னிந்தியா) நாடி வந்தவண்ணம் இருந்தனர்.  மாவீரன் அழகுமுத்து உட்பட.
       மதுரையின் பாண்டிய மன்னனின் கட்டுப்பாட்டிற்குள் இடம்புகுந்த மாவீரன் அழகுமுத்து, அவரின் சகோதரர் மற்றும் சகோதரியும், தென்காசி பகுதியில் ஆண்டுகொண்டிருந்த அழகர்முத்து என்பவரின், எல்லைக் காவலனாக மதுரை மன்னனால் அனுப்பி வைக்கப்பட்டார். அதன்பின்னர் கழுகுமலையின் அரசவைக்கு உயர்வுபெற்றார். அதன்பின் "கட்டாளங்குளம்" எனும் ஊரில் ஒரு கோட்டை கட்டி அங்கே மன்னராக நியமிக்கப்பட்டார்.
   வடக்கே இருந்து வந்த மாவீரன் அழகுமுத்து, இங்கே வாழ்ந்து கொண்டிருந்த, கண்ணனையும் பெருமாளையும் வணங்குகின்ற எடையர் இன மக்களோடு, தான் வணங்கும் அதே தெய்வங்களைத் தான், இந்த மக்களும் வணங்குகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு தன்னையும் எடையரின மக்களோடு ஒப்புமைப்படுத்திக் கொண்டு அம்மக்களுக்கு காவலராகவும் வாழ்ந்து வீரதீர செயல்களைச் செய்து கொண்டிருந்த அழகுமுத்து, ஒரு கட்டத்தில் ஆங்கிலேயரின் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையாகி மடிந்து போனார் என்பது வரலாறு.
    விஜயநகப் பேரரசின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த "யதுகுல" மக்களில் ஒருவரான "மாவீரன் அழகுமுத்து" தமிழப்பாட்டன் என்று சொல்லி, வரலாற்றைத் திரித்துக் கொண்டிருக்கும் சீமான் போன்றவர்களின் முகத்திரை கிழிக்கப் பட வேண்டுமென்தற்காகவே இதைப் பதிகிறேன்.
     இப்படி வரலாறு தெரியாமல்,  பிறப்பால் தமிழரல்லாதவர்களையெல்லாம், தமிழரென்றும், பிறப்பால் தமிழரானவர்களையெல்லாம் தமிழரல்லாதோர் என்றும் பேசிக் கொண்டிருக்கும்,  சீமானின் பேச்சையும் கேட்டு கை தட்டிச் சிரித்துக் கொண்டிருக்கும், உணர்ச்சிப் பிளம்பாய் வெடித்துக் கொண்டிருக்கும் "ஈழத் தமிழர் நலனில் உண்மையான அக்கறை" கொண்ட இளைஞர்கள் கூட்டம் தடம் மாறிச் செல்வதை நினைத்தால் வருத்தமாய்த் தான் உள்ளது.

Monday, November 17, 2014

அதென்ன 200 கோடி!!!

  ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து, கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி கடன் பெற்றதற்காக தொடுக்கப்பட்ட வழக்கின் இறுதிக்கட்ட விசாரனை  துவங்கியது. நல்ல விசயம் தான், விரைவில் நல்ல தீர்ப்பு வருமென்று எதிர்பார்க்கிறோம்.

    இதுவரை 1.76 லட்சம் கோடி என்று குறிப்பிட்ட பல பத்திரிக்கைகள், இந்தக் குற்றச்சாட்டு ஊதப்பட்ட ஊத்தாமட்டி தான் என்பது பல்வேறு வகைகளில் நிரூபிக்க தயாராக இருக்கிறன்ற நிலையில், இப்போதெல்லாம் 1.76 ஐ விட்டுவிட்டு கோடிக்கணக்கில் ஊழல் என்று மட்டுமே குறிப்பிடத் தொடங்கியிருக்கிறார்கள். அதாவது பின் வாங்கத்தொடங்கிவிட்டன பத்திரிக்கை தர்மங்கள்.

     சில பத்திரிக்கைகள் 1.76 பற்றி பேசுவதையே நிறுத்தி விட்டு, அந்தர்பல்டி அடித்து வெறும் 200 கோடி கடன் பெற்ற வழக்கைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றனர். சரி அப்படி என்னதான் இந்த வழக்கில் நடந்திருக்கிறது என்று பார்த்தோமேயானால், அட, இவ்வளவுதானா இதற்குத்தானா இவ்வளவு களேபரம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஆமாம்,

  கலைஞர் டி.விக்கு 200 கோடி வாங்கியதை, எந்த இடத்திலும் ஜெ, போல் தலைகீழாய் நின்று நான் போட்ட கையெழுத்தே இது இல்லை, சுதாகரனின் திருமணச் செலவை சிவாஜியின் மகனே கவனித்துக் கொண்டார் என்றெல்லாம் பீலா விட்டு, வழக்கைத் திசை திருப்ப முயலவில்லை, தைரியமாகவேச் சொல்கிறோம் 200 கோடி வாங்கத்தான் செய்தோம் என்று. லஞ்சம் வாங்கிய எவராவது நான் வாங்கத்தான் செய்தேன் என்று வாதிடுவார்களா கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அதையும் தாண்டி வாங்கிய 200 கோடி ரூபாய் பணத்தை வட்டியோடு சேர்த்து 214 கோடியாக திருப்பிச் செலுத்தியிருக்கிறது கலைஞர் டி.வி நிர்வாகம். லஞ்சம் பணம் என்றால் வட்டியோடு ஏன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று இன்னொரு கேள்வியும் நீதியரசர் ஓ.பி.ஷைனியின் முன் வைக்கப்படுகிறது.

  அடுத்து, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து, 200 கோடி வாங்கிய பணம் முறைப்படி பதிவு செய்யபட்டு, அதற்கான வரித் தொகையும் கட்டப்பட்டிருக்கின்ற நிலையில், அது எப்படி லஞ்சப் பணமாக முடியும், பித்தம் தெளியாத பைத்தியங்கள் கூட, லஞ்சப் பணத்தைப் பதிவு செய்து வாங்கமாட்டார்கள், பகுத்தறிவும் அறிவுத் தெளிவும் கொண்ட தி.மு.க வினரா, லஞ்சத்தை பதிவு செய்து வாங்கப் போகிறார்கள் என்ற கேள்வியிலேயே, இந்த வழக்கின் உறுதித்தன்மை சுக்குநூறாய்ச் சிதைந்து போகிறது.

    ஏற்கனவே, இந்த வழக்கில் வாதிட்ட ராம்ஜெத்மலானி போன்றவர்கள் , கனிமொழியை கலைஞரின் மகள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்று நீதிமன்றத்தில் வாதிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  மிகத் தெளிவான வாதங்களில் அதுவும் முக்கியமான ஒன்று.

    ஸ்வான் நிறுவனத்திடம் இருந்து பணம் கடன் வாங்குவதற்கு முன்னரே, கனிமொழி கலைஞர் டி.வி பங்குதாரரில் இருந்து விலகியிருக்கும் போது, அவர் எப்படி இந்த வழக்கில் குற்றவாளியாக முடியும் என்ற வாதத்திலே இதன் இந்த வழக்கின் இன்னொரு அடிநாதமும் சிதைந்து போகிறது.

   ஆக, இந்த வழக்கின் தீர்ப்பையும், 1.76 லட்சம் கோடி ஊழல் வழக்கின் தீர்ப்பையும் மிகுந்த ஆர்வத்துடனே தி.மு.க வினர் பலர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

     ஊழல் நடந்ததா இல்லையா அரசுக்கு இழப்பு ஏற்பட்டதா இல்லையா என்பதையெல்லாம் கடந்து, இந்த வழக்கில் அதிக லாபம் அடைந்தவர்கள் ஊடகப் பெருச்சாளிகள் மட்டுமே.

    ஒரு மனிதனிடம் இருந்து, அரசுத்தொடர்புடைய இன்னொரு மனிதன் கடன் வாங்கக் கூடாது என்றும் எந்தச் சட்டத்திலுமே குறிக்கப்படாத போது, அப்படி வாங்கப்பட்ட கடன் லஞ்சம் என்று சொல்லி பொய்யான பரப்புரைகளைச் செய்து, தி.மு.கழகத்தை வீழ்த்த நினைக்கும் கருங்காகங்களுக்கும் ஓநாய்களுக்கும் தக்க சம்மட்டியடியாக இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவர விரும்புகிறேன்.

   தி.மு.க எத்தனையோ குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு பீடு நடைபோட்டு வலம் வந்த இயக்கம் என்பதை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது

Sunday, November 16, 2014

இவரல்லவோ தலைவர்!!

திராவிட இயக்கத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான மதிப்பிற்குரிய அய்யா சின்னக்குத்தூசி அவர்கள், ஒப்புயர்வில்லா தலைவர் கலைஞரைப் பற்றி எழுதிய கட்டுரைத் தொகுப்பை இன்று எனக்குப் படிக்க நேர்ந்தது. பாதி தான் படித்திருக்கிறேன். பாதியிலே என் உள்ளம் சொக்கிப் போய் நிற்கின்றேன். அடடா!! இப்படி ஒரு திறமைமிக்க மனிதரையா நாம் தலைவராகப் பெற்றிருக்கிறோம் என்று உண்மையில் வியந்து போனேன். இதுவரை நான் அந்தக் கட்டுரைத் தொகுப்பில் படித்ததில் இருந்து, உங்களுக்கும் அந்த நிகழ்வுகளையெல்லாம் சொல்லாமல் இருக்க என் மனம் எனக்கு இடம் கொடுக்கவில்லை. ஆதலால் அவற்றில் இருந்து சில முக்கியமான நிகழ்வுகளை என்னுடைய நடையிலே எழுதுகிறேன்.

   திருவாரூரிலே விவசாயிகள் மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்ட போது, அதன் முழுப் பொறுப்பையும் அண்ணா கலைஞரிடம் கொடுக்க, கலைஞர் திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுற்றி, பல பொதுக்கூட்டங்களை நடத்தி, மாநட்டிற்கான நிதியைச் சேர்த்ததோடில்லாமல், பொதுக்கூட்டங்கள் முடிந்தவுடன் மாநாட்டுப் பந்தலுக்குச் சென்று, பசையும் போஸ்டருமாய், கம்பும் கொடியுமாய் வேட்டியை முழங்காலுக்கு மேல் கட்டி, மாநாட்டுக்கான அத்தனை வேலைகளையும் முன்னின்று செய்து, மாநாட்டையும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களிடம் சிறப்பாக நடத்திக்காட்டி, மாநாட்டுச் செலவு போக மீதமுள்ள கொஞ்சம் பணத்தையும் கழகத்திற்கு முதன்முதலில்  நிதியாகக் கொடுத்திருக்கிறார் கலைஞர்.

     திருச்சி மாவட்டம் அண்ணா காலத்திலேயே பல்வேறு அணிகளைக் கொண்ட மாவட்டமாக திகழ்ந்ததால், தொண்டர்கள் சோர்வுற்றிருந்ததைக் கண்டு, பலமுறை முக்கிய நிர்வாகிகள் அழைத்தும் அண்ணா திருச்சிக்கு வரவே மாட்டேன் என்று கூறிவிட,  பின் தன் தம்பியை அனுப்பி திருச்சியை சரிசெய்து வரச் சொல்லியிருக்கிறார் அண்ணா.
  
  களமிறங்கிய கலைஞர் ஒரே நாளில் திருச்சியில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் கழகக் கொடியினை ஏற்றி, தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பிளவுபட்டுக் கிடந்த அணிகளையும் ஒன்று சேர்த்திருக்கிறார்.

  திடீரென, நெசவாளர்களின் துயரம் தீர்க்க ஒவ்வொரு கழகத் தொண்டனும் கைத்தறித் துணிகளை தோலிலே சுமந்து வியாபாரம் செய்யச் செல்ல வேண்டுமென தீர்மானிக்க, யார் எங்கே செல்வது என்று திட்டமிட்டக் கொண்ணிருந்த போது, எந்த அண்ணா நான் திருச்சிக்கே போகமாட்டேன் என்று சொன்னாரே, அதே திருச்சியில் நான் கைத்தறி ஆடைகளைத் தோலிலே சுமந்து வியாபாரம் செய்கிறேன் என்று முதல் ஆளாய் தெரிவித்தார். அந்தளவிற்கு கலைஞர் திருச்சியை கழகத் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியுறச் செய்திருத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

   அண்ணா காலத்தில் 1959 ல் என நினைக்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி நூறு வார்டுகளைக் கொண்ட மாநகராட்சியாகச் செயல்பட்டு வந்தது. தி.மு.க சார்பில் நூறில் தொண்ணூறு வார்டுகளில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அப்போது பேரறிஞர்ப் பெருந்தகை அவர்கள், கலைஞரிடம் நாற்பது சீட்டுக்களுக்கு மேல் வெற்றி பெற்றால் நான் உனக்கு கணையாழி அணிவிக்கிறேன் என்று சபதமிட, நூறு தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே முப்பத்தைந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற, கலைஞரின் அயராத உழைப்பால் தொண்ணூறு இடங்களில் போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழகம் நாற்பத்தைந்து இடங்களில் வெற்றிபெற்றது., பேரறிஞர் அண்ணா அவர்கள் பாராட்டு விழாவொன்றை நடத்தி, "என் தம்பி கருணாநிதிக்கு நானே கடை கடையாய்த் தேடி அழைந்து வாங்கி வந்த கணையாழியைப் பரிசளிக்கிறேன்" என்று சொல்லி கலைஞருக்கு கணையாழி ஒன்றை அணிவித்தார் அண்ணா.

    ஒருமுறை தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாற்றுக்கு அப்போதைய மத்திய அரசின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி வருவதாக இருந்ததையொட்டி, அவருக்குக் கருப்புக் கொடி காட்டுவதென முடிவெடுக்கப்பட்டது.  மன்னை நாராயணசாமி அவர்களுடன் தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணத்தில் இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் கருப்புக் கொடி காட்டத் தயராவதற்கு, இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி அறிந்த காவல் துறையினர், தி.மு.க வினர் பலரையும் கைது செய்யத் தொடங்கினர். கருப்புக்கொடி காட்டவேண்டிய அந்த நாளன்று புகைவண்டியிலே சென்னையில் இருந்து கிளம்பிய கலைஞரை, தஞ்சை நிலையத்தில் கைது செய்து அழைத்துச் செல்ல, காவல்துறை தயாராக இருந்தது.

   இதை அறிந்த கலைஞர், புகைவண்டியை விட்டு இறங்கியதுமே தோலிலே போட்டிருந்த துண்டையெடுத்து, தலையிலே முண்டாசு கட்டிக் கொண்டு மக்களோடு மக்களாக கலந்து காவல் துறையினரிடம் தப்பித்து, காட்டு வழியாக நடந்து சென்று, கழக உடன்பிறப்புக்கள் குழுமியிருந்த இடத்தை அவர் அடைந்த போது காவல் துறையினரே திகைத்துப் போயி நின்றிருக்கின்றனர். அவரை அத்துனை கூட்டத்திற்கும் நடுவில் கைது செய்தால் பிரச்னை பெரிதாகும் என்று கருத்தில் கொண்டு கைது செய்யாததால், திட்டமிட்டபடி ராஜாஜிக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது.

       இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்துக் கிளம்பிய நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக கலைஞர் பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையிலே அடைக்கப்பட்டார்.  அவரைப் பார்க்க அண்ணா வருகின்ற செய்தியறிந்த கலைஞர் மகிழ்ச்சியில் பூரித்துப் போயிருந்தார். அண்ணாவும் கலைஞரைத் தனிமைச் சிறையிலே பார்த்து விட்டு அன்றிரவு நெல்லையிலே நடந்த பொதுக்கூட்டத்திலே பேசுகின்ற போது, "என் தம்பி அடைபட்டுக் கிடக்கின்ற பாளையங்கோட்டைச் சிறைச்சாலை எனக்கு யாத்திரை ஸ்தலம், எல்லோரும் தனிமைச் சிறையில் என் தம்பி வாடுவதாகக் குறிப்பிட்டனர். பக்தவத்சலம் அவ்வளவு கொடுமைப்படுத்தக் கூடியவரெல்லாம் அல்லர் அவனோடு பாம்புகளையும் பல்லிகளையும் குடியமர்த்திருக்கிறார் என்று பேசிவிட்டு, என் தம்பி நான் சென்றதும் அண்ணா என் மனையாளைப் பார்த்தீரா, என் செல்வங்கள் நலமாக இருக்கிறார்களா, என் இல்லத்திற்குச் சென்றீர்களா,என்று கேட்பானென்று தான் நினைத்தேன், அவன் நம் கழக நிலவரமென்ன என்று கேட்டறிந்த போது நானே பூரித்துப் போனேன்" என்று பேசினார்.

      எத்துனை சோதனைகளே வரினும் எடுத்த காரியத்தைஙவெற்றியோடு முடித்துக்காட்டுகின்ற கலைஞரின் திறத்தையும், எந்த நிலையிலும் தொண்டர்கள் மத்தியில் உற்சாகமூட்டுகின்ற கலைஞர் இருக்கின்ற வரை, தி.மு. கழகத்தை எவராலும் அசைக்க முடியாது என்கின்ற செய்தியெல்லாம் நான் படித்த போது  கலைஞர் மீது, இதுவரை இருந்த அன்பையும் மரியாதையையும் விட இப்போது ஒரு நூறு மடங்கு கூடிவிட்டதாகக் கருதுகிறேன். இவ்வளவு திறமை மிக்க தலைவரையும் நேரிலே சந்தித்துப் பேசிவிட்டு வந்து விட்டோமே என்று என் மீதே நானே பொறாமைப்பட்டுக் கொள்ளவே தோன்றுகிறது.

   எத்தனை தலைவர்கள் இருந்தாலும் , கலைஞருக்கு நிகரான ஒரு தலைவர் இதுவரை பிறக்கவேயில்லை என்பது நூறு சதவிகித உண்மை.