Tuesday, March 19, 2019

யாரை மக்களவைக்கு அனுப்பவேண்டும்?

நான் ரொம்ப சுயநலக்காரன். பொதுநலன் கருதி திமுகவை ஆதரிப்பதைவிட சுயநலத்திற்காகத்தான் அதிகமாக ஆதரிக்கிறேன்.  இந்த மக்களவைத் தேர்தலிலும் அப்படித்தான்.  பச்சை சுயநலத்தோடு சிந்தித்துதான் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்கப்போகிறேன்.  ஏன் என்றால்,

• நீட் தேர்வு ரத்து.  என் அடுத்த தலைமுறையும், உறவினர்களின் குழந்தைகளும் முன்பு போல் மீண்டும் டாக்டர் ஆக முடியும்.  அனிதாவின் நிலைமை அவர்களுக்கு வராது.

• சுங்கச்சாவடி பகல் கொள்ளை ரத்து.  ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போதும் டோல்கேட் என்கிற பெயரில் நடக்கும் வழிப்பறி ரத்து. மாதம் பல ஆயிரங்கள் மிச்சமாகும். 

• தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு.  இனி தோளைத் தொட்டுப்பார்த்தோ, நூல் இருக்கிறதா எனத் தடவிப்பார்த்தோ பதவி உயர்வோ, வேலையோ கொடுக்க முடியாது.  சட்டம் செருப்பால் அடிக்கும்.

• சென்னையில் மெட்ரோ கொண்டு வந்த திமுக, அடுத்த கட்டமாக, மதுரை, திருச்சி, கோவையில் மெட்ரோ ரயில் கொண்டு வர இருக்கிறது.

• மாநிலப் பட்டியலில் கல்வி.  இந்திக்காரர்களினால் பொய்யும் புரட்டும் புகுத்தப்படும் வரலாற்றைப் படிக்காமல் நிஜ வரலாற்றை, தமிழகத்தின் பெருமையைப் படிக்கலாம்.  இதுபோல் ஆயிரம் நன்மைகள் உண்டு.

• மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து.

• மாணவர்கள் தடையின்றி படிக்க கலைஞர் இலவச பஸ் பாஸ் கொடுத்தார்.  ஸ்டாலின் இலவச ரயில் பாஸ் தரப்போகிறார்.

• பட்டேல் சிலையை வைத்துவிட்டு அதற்கு டிக்கட் போடுகிறவனுக்கு கூட சம்பள பாக்கி வைக்கும் நிலையில் உள்ளது இந்தியப் பொருளாதாரம். அதை மீட்க நிபுணர் குழு அமைக்கப்படும். நிபுணர் குழு என்றால் குருமூர்த்தி போன்ற ஃப்ராடுகள் இல்லை.  ரகுராம் ராஜன் போன்ற ஜெயிச்சு கப் வாங்கியவர்கள். 

• மினிமம் பேலன்ஸ் வைக்க முடியாதவர்களிடம் பிடிங்கித் தின்ற பணம் வட்டியுடன் திருப்பிக் கொடுக்கப்படும்.

• கேஸ் மானியத்துக்காக காத்திருக்க வேண்டியதில்லை.  முன்புபோல் கேஸ் வாங்கும் போதே மானியம் கேஸ் விலையில் கழிக்கப்படும்.

இதுபோல் திமுகவை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு.  சேலம் ஸ்டீல் ஆலையை இந்திராகாந்தியுடன் சண்டைபோட்டு தமிழகம் கொண்டு வந்த கலைஞரின் வரலாற்றில் துவங்குகிறது தமிழகம் திமுகவின் போராட்டத்தால் மத்திய அரசிடம் பெற்ற உரிமைகளின் வரலாறு. 

"வலியுறுத்துவோம், வலியிறுத்துவோம்," எனக் குழையும் அதிமுக அடிமைகளின் முனகல் ஒருபக்கம்.  "செய்துமுடிப்போம்," என உறுதியாய்ச் சொல்லும் திமுகவின் முழக்கம் ஒருபக்கம்.

நாற்பது பேராக மக்களவையில் நுழைந்து "காஷ்மீர் ப்யூட்டிபுல் காஷ்மீர்," எனப் பாடி தமிழ்நாட்டின் மானத்தை வாங்கும் அதிமுக மொக்கைகள் ஒருபக்கம். 

தனி ஆட்களாகத் தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றக் கர்ஜிக்கும் திருச்சி சிவாக்கள் ஒருபக்கம்.  "இதென்ன அநியாயமா இருக்கு," என சமூகநீதிக்கெதிராக எது நடந்தபோதும் வீறுகொண்டெழும் கனிமொழிகள் ஒரு பக்கம்.  

நீங்கள் யாரை மக்களவைக்கு அனுப்பப் போகிறீர்கள்?   வில்லன்களுக்கு காவடி தூக்கி, ஆயில் மசாஜ் செய்துவிடும் காமடியன்களையா, அல்லது  கதாநாயகர்களையா? 

-டான் அசோக்
மார்ச் 19, 2019