Wednesday, July 6, 2016

கச்சத்தீவு மீட்கப்பட்டிருக்குமா!!

கச்சத்தீவு விவகாரத்தில் உண்மையிலே கலைஞர் துரோகம் தான் செய்தாரா,,, நான் அதை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற முழு ஆவலோடு தான் எழுத்தாளர் ஆர்.முத்துக்குமார் அவர்கள் எழுதிய "கச்சத்தீவு" புத்தகத்தை வாங்கினேன். முழுமையாகப் படித்தேன்.

   கச்சத்தீவு அம்மையார் இந்திராகாந்தியால் தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதில் கலைஞருக்கு எந்த வித தொடர்பும் கிடையாது. 1974 ஜூன் மாதம் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட உடனே,, ஜூலை மாதத்தின் முதல்வாரத்திலே  ஆட்சியில் இருக்கிற கலைஞர் மாநிலம் முழுவதும் நாற்பத்தைந்து இடங்களில் மாபெரும் கண்டனக் கூட்டங்களை நடத்துகிறார். தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதிப்பிற்குரிய செழியன், முரசொலிமாறன், மாதவன் போன்றோர் நாடாளுமன்றத்தில் கடுமையாய் தங்களின் குரல்களை எழுப்புகின்றனர். கவன ஈர்ப்புத் தீர்மானங்களைக் கொண்டு வருகின்றனர்.

   ஆனால் இந்திராகாந்தி அம்மையாரோ, நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், மாநில அரசைக் கேட்காமல்  தெற்காசிய நாடுகளில் தன்னைப் பெருந்தலைவராக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்கிற காரணத்துக்காக பக்கத்து நாடுகள் தன்னுடைய தலையசைவின் கீழ் வரவேண்டும் என்கிற அரசியல் ஆதாயத்துக்காக,  அரசியலமைப்புச் சட்டத்தையும் மீறி கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்க்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.

   இது நடந்த சில மாதங்களிலேயே இந்நிராகாந்தியின் தேர்தல் வெற்றிக்கு எதிரான தீர்ப்பு அலகாபாத் நீதிமன்றத்தில் வருகிறது. அம்மையார் நெருக்கடி நிலையை அமல்படுத்துகிறார். நாடு முழுவதும் மாநிலக் கட்சிகள் ஒடுக்கப்பட்டன. கலைஞரின் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது. கச்சத்தீவுக்கான போராட்டங்கள் திசைமாற்றப்பட்டன.

  அதற்குப் பின்னால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைகின்றது. 1977 லே நடந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக எம்.ஜி.ஆர் முதல்வராகிறார். அதற்கடுத்த இரண்டு தேர்தல்களிலும் அவரே முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு ஆதரவான ஆட்சி மத்தியில் இருந்த போதும் அவர் கச்சத் தீவு பற்றி வாயே திறக்கவில்லை. இதற்கிடையிலே தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கச்சத்தீவு விவகாரத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

  நிற்க.

   முதலில் கச்சத்தீவு இந்தியவுக்கும் இலங்கைக்கும் இடையேயான எல்லைப் பிரச்சனை. இதில் இரண்டு நாட்டு அரசுகளும் தான் முடிவெடுக்க வேண்டும். அப்படியெடுக்கப்பட்ட முடிவுகள் கூட அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, நாடாளுமன்றங்களை புறந்தள்ளி தனியொருவரான இந்திராகாந்தி அம்மையாரின் முடிவோடு மட்டுமே கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதில் கலைஞர் தன்னுடைய கோரிக்கைகளை, கண்டனங்களை, எதிர்ப்புகளை மத்திய அரசிடம் எந்தளவிற்குக் கொண்டு செல்ல முடியுமோ அந்தளவிற்குக் கொண்டு சென்றார். ஆனால் இந்திராகாந்தி சில அரசியல் ஆதாயங்களுக்காக தமிழர்களுக்குத் துரோகம் செய்து விட்டு சர்வாதிகாரப்போக்கோடு கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துவிட்டார்.

   அதே நேரத்தில் நெருக்கடி நிலையையும் அமல்படுத்தி கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறித்துவிட்டார்.

    மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஆர்.முத்துக்குமார் அவர்கள் இந்தப் புத்தகத்தில் எந்த இடத்திலும் கச்சத்தீவு விவகாரத்தில் கலைஞர் பின்வாங்கினார் என்றோ அமைதி காத்தோர் என்றோ  புத்தகத்தின் எந்த வரியிலுமே இல்லாததைக் கண்டு, நான் அறிந்து கொண்ட விசயம் "கலைஞர் என்றால் சிலருக்குக் கிள்ளுக்கீரையாகப்படுகிறார்" என்பது மட்டுந்தான்.

    ஒன்றே ஒன்றை மட்டும் இதைப்படித்து முடித்த போது, நான் உணர்ந்து கொண்டேன்,,, நெருக்கடி நிலை அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தாலோ அல்லது மாநில அரசு இந்த விசயத்தில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும் என்ற ஒரு நிலை இருந்திருந்தாலோ இந்த விசயத்தில் கலைஞர் தன்னுடைய முழுவீரியத்தையும் காட்டியிருக்க முடியும்.

    மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும் என்றொரு நிலை இருந்திருந்தால்,,, பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்தித் திணிப்பு விவகாரத்தில்  இருமொழிக் கொள்கையை சட்டமன்றத்தில் வகுத்து விட்டு,, "நான் என்னாலானதைச் செய்து விட்டேன், மத்திய அரசு தன்னாலானதைச் செய்து கொள்ளட்டும்" என்றொரு முடிவை எடுத்திருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.

   கச்சத்தீவைத் தாரைவார்த்து தமிழர்களுக்குத் துரோகம் செய்தது கலைஞர் அல்ல,, சர்வாதிகாரியாகச் செயல்பட்ட அம்மையார் இந்திராகாந்தி என்பது வார்த்தைஜாலம் அல்ல வரலாறு.

Saturday, March 5, 2016

எங்கள் இராசை மக்கள் இன்னமும் ஏமாறத்தான் வேண்டுமா?

நான் இராசபாளையத்துக்காரன். எங்கள் சட்டமன்ற தொகுதி கிட்டதட்ட பதினைந்து ஆண்டு காலமாக இராசகோபால், சந்திரா,, கோபால்சாமி என மூன்று அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களைத் தொடர்ந்து பெற்று வந்திருக்கிறது. மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை அ.தி.மு.க விற்கு தொடர்ந்து தந்த எங்கள் இராசபாளையம் நகரமும் அதைச்சுற்றிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளும் பதினைந்து ஆண்டுகளில் எத்தகைய முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. எப்படிப்பட்ட மகத்தான திட்டங்களை எல்லாம் இங்கே செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை எங்கு சுற்றிப் பார்த்தாலும் இந்த தொகுதியின் தனிப்பட்ட வளர்ச்சிக்கான எவ்வித பணிகளும் இங்கு நிறைவேற்றப்படவே இல்லை என்பது நிதர்சனமாகிறது.

     கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், சிறுமழை பெய்தாலும் வெள்ளம் போல் பெருகின்ற இடமாக எப்படி இருந்ததோ அப்படியே தான் இப்போதும் , நகரின் மையப்பகுதியான காந்தி சிலை ரவுண்டானா இருக்கிறது.  தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் பாதாள சாக்காடைத் திட்னங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், ஒரு லட்சத்திப் பதினோராயிரம் வாக்குகளும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக உள்ள மக்கள் தொகையும் முதன்மை நிலை நகராட்சியான இராசபாளையத்தில் இதுவரை பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படவே இல்லை. ஆனால், அ.தி.மு.க விடுகின்ற ஒவ்வொரு தேர்தல் அறிக்கைகளிலும், வாக்குக் கேட்டு வருகின்ற போதும் தவறாமல் அ.தி.மு.க வினர் விடுகின்ற வாக்குறுதியாக இந்த பாதாள சாக்கடைத் திட்டம் இருந்து வந்திருக்கிறது. தொடர்ந்து வெற்றி பெற்றும் அ.தி.மு.க சட்டமன்ற பிரதிநிதிகள் பாதாள சாக்கடை கட்ட இதுவரை சிறு கல்லைக் கூட எங்கும் எடுத்துப் போடவில்லை.

   இரண்டாவது, தொகுதியின் மிக முக்கியப் பிரச்சனை குடிநீர்ப் பிரச்சனை. தாமிரபரணிக் குடிநீர் இதோ வந்துவிட்டது, அதோ வந்துவிட்டது, அதற்காக இத்தனை கோடி ஒதுக்கிய அம்மாவுக்கு நன்றி என்பது போன்ற விளம்பர பேனர்களைத் தான் தாமிரபரணிக் குடிநீரை எதிர்பார்த்த மக்கள் கண்டு கொண்டிருக்கிறோமே தவிர, தாமிரபரணி நீரை இன்னமும் நாங்கள் குடித்தபாடில்லை. தாமிரபரணி நீர்கூடவேண்டாம், இராசபாளையம் நகராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தீர்க்க மேற்குத் தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் பகுதியில் "இரண்டாம் நிலை நீர்த்தேக்கம்" அமைப்பதற்கான திட்டமிடல் 96-2001 தி.மு.க ஆட்சியிலேயே அப்போதைய தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய வி.பி.இராசன் அவர்களின்
முயற்சியால் முடிக்கப்பட்டிருந்தாலும் அதன்பின் இதுபற்றி பேசுவதற்கு சட்டசபைக்கு இராசபாளையம் சார்பில் ஒரு சரியான பிரதிநிதியை எங்கள் மக்கள் அனுப்பாததாலேயே  இத்திட்டம் இன்று வரை கிடப்பில் கிடக்கிறது. இத்திட்டம் ஒன்று மட்டும் நிறைவேறினாலே போதும், இராசபாளையத்தில் எவ்வளவு பெரிய கோடையிலும் குடிநீர்த்தட்டுப்பாடு அறவே இருக்காது.

     மூன்றாவதாக தமிழகத்தின் குட்டி ஜப்பான என்று வர்ணிக்கப்படக்கூடிய சிவகாசிக்கு இணையான எங்கள் இராசபாளையம் தொகுதிக்குட்பட்ட தளவாய்புரத்தில் எத்தனையோ தொழில் முன்னேற்றங்கள் இருந்தும், அந்நகரில் எவ்வித வளர்ச்சியும் கொண்டு வராமல், அங்கே நலிந்து போன விசைத்தறி மற்றும் சாயப்பட்டறை  தொழிலாளர்களுக்கு உதவுகின்ற வண்ணமும், அவர்களுடைய வாழ்க்கையினை மேம்படுத்துகிற வகையில் எவ்வித திட்டமும் கொண்டு வராமல் அவர்களைக் கண்டு கொள்ளவே செய்யாமல் கடந்து சென்று கொண்டிருக்கிறது பதினைந்து ஆண்டு காலம் தொடர்ந்து அ.தி.மு.க விற்கு வாக்களித்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ க்களின் ரதங்கள். தளவாய்புரம் செட்டியார்பட்டி பகுதிகளில் இதுவரை நல்ல சாலைகள் கூட அமைக்காப்படாதது இந்த எம்.எல்.ஏ க்களின் லட்சணம்.

  நான்காவதாக இராசபாளையம் நகராட்சிக்கான புறவழிச்சாலை. தற்போதுள்ள கோபால்சாமி எம்.எல்.ஏ வந்த பின்பு கூட எத்தனையோ முறை நாளேடுகளில் செய்திகள் வந்த போதும் கூட, அப்பாட கோபால்சாமியாச்சும் நம்ம ஊருக்கு பைபாஸ் ரோடு போட்டுருவாருய்யா என் நம்பிக் கிடந்த மக்களுக்குப் பெரும் ஏமாற்றம் தான், ஏனெனில் இன்றோடு அவருடைய பதவிக்காலமும் முடிந்து விட்டது. ஆனால் இது குறித்த திட்டம் கடந்த தி.மு.க ஆட்சியில் அப்போதை மத்திய அமைச்சர் மதிப்பிற்குரிய அய்யா டி.ஆர்.பாலு அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டு, கிருஷ்ணன் கோவிலில் இருந்து புறவழிச்சாலை தொடங்கி, தேவதானம் கோவிலூரை அடுத்து நெல்லை மாவட்டத்தோடு இணைவதாக இத்திட்டம் தீட்டப்பட்டிருந்த நேரத்தில் ஆட்சி மாறியதால் காட்சிகளும் மாறியது.ஆனால்  மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு நகரின் போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்பட அத்தனை சாத்தியக்கூறுகளும் உள்ளன.

   அடுத்து, இராசபாளைநம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவில் பகுதியை சுற்றுலாத்தளமாக மாற்ற கோபால்சாமி எம்.எல்.ஏ வும் நகர்மன்றத் தலைவர் தனலட்சுமியும் அங்கே சுற்றி சுற்றிப் பார்த்தது தான் மிச்சம்.
ஆனால் இதுவரையிலும் அங்கே சுற்றுலா தளம் அமைய எவ்வித பணிகளும் தொடங்கவில்லை. அப்பகுதி சுற்றுலா தளமாக அமைந்தால் எங்கள் இராசபாளையம் சின்னக் குற்றாலமாய் மாறும். அந்தளவிற்கு அப்பகுதி பொலிவுற அமைந்திருக்கிறது. ஆக இத்திட்டமும் கிடப்பில் தான் கிடக்கிறது.

    முல்லை பெரியாறு அணைக்குச் சமமான ஒரு அணையை எங்கள் இராசபாளையம் பகுதியில் அமைக்க அன்னை இந்திராகாந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது, திட்டம் தீட்டப்பட்டு,  அவர் இப்பகுதியை பார்வையிட இருந்தது.திடீரென வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் அவர் இங்கு வரவில்லை. அத்திட்டம் அத்தோடு ஒத்தியும் வைக்கப்பட்டதெனவும், அம்மையார் வந்து அப்பகுதியைப் பார்வையிட வருவதற்காக போடப்பட்ட சாலை தான் தேவதானம் சாஸ்தா கோவில் சாலை என எங்களூர்ப் பெரியவர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்திராகாந்தி விரும்பிய அதே இடத்தில் ஒரு அணையைக் கட்டி, தேவதானம் முகவூர் மற்றும் இதற்கடுத்துள்ள பகுதிகளில் தண்ணீர்ப் பிரச்சனை இல்லாமல் செய்தது எங்கள் தி.மு.க வை இம்மக்கள் வெற்றி பெற செய்த அந்த நேரத்தில் தான். அப்படி தி.மு.க ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட அணை தான் சாஸ்தா கோவில் அணை.

    ஆக, பதினைந்து ஆண்டு காலம் நம் பகுதி எவ்வித வளர்ச்சியும் இல்லாமல், ஏன் சாலை வசதிகள் கூட சரிவர இல்லாமல் தான் இருந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் நம் தொகுதி மக்கள் ஒரு சரியான நபரை நமக்கான பிரதிநிதியாக சட்டசபைக்கு அனுப்பாததே மிக முக்கியக் காரணம். ஆதலால், குனிந்து கும்பிடுபோடுவோரைத்தான் இந்த முறையும் நமக்கான பிரதிநிதியாக இராசபாளையம் பகுதி மக்கள் அனுப்பவேண்டுமா அல்லது கூன் நிமிர்த்தி, குரலுயர்த்தி இராசபாளையம் மக்களுக்காக சட்டசபையில் ஓங்கி ஒலிப்போரை அனுப்ப வேண்டுமா என்பதை முடிவு செய்து வைத்திருங்கள். ஏனெனில் இன்று அதற்கான தேதியையும் நேரத்தையும் குறித்து விட்டார்கள்.

  நல்லதொரு முடிவெடுங்கள். தி.மு.க பிரதிநிதிகள் உங்களுக்காக உழைக்க உங்கள் உத்தரவு கேட்டு உங்கள் வீட்டு வாசலுக்கு வருகிறோம். உத்தரவைக் கொடுத்தனுப்புங்கள். உழைத்து உழைத்து நம் பகுதியை உயர்த்துகிறோம்.