Showing posts with label மொழிப்போர். Show all posts
Showing posts with label மொழிப்போர். Show all posts

Friday, January 23, 2015

விருதுநகர் பெ.சீனிவாசனும் மொழிப்போரும்

    கடந்த வாரம் இராசபாளையத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். அங்கே எனக்குப் பளிச்சென தெரிந்த புத்தகம் ஆர்.முத்துக்குமார் எழுதிய "மொழிப்போர்" தலைப்பிட்ட புத்தகம் மட்டுமேயாகும். வேலைப் பளுக்களுக்கிடையே நான்கைந்து நாட்கள் தொடர் போராட்டத்துக்குப் பின் நேற்று தான் இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தேன். முடித்த அந்தத் தருவாயில் வெறும் கழக முன்னோடியாகவும், காமராஜரைத் தோற்கடித்தவராகவும் மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த  எனக்கு மதிப்பிற்குரிய பெ.சீனிவாசன் அவர்களைப் பற்றி ஒரு கட்டுரையை நிச்சயம் எழுதியே தீரவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது.

  இந்தித் திணிப்பை எதிர்த்து நடைபெற்ற மூன்று கட்ட போராட்டங்கள் முடிவுற்றிருந்த தருவாயில் கே.பிளான் படி, கட்சியை வளர்க்க 1960 களின் தொடக்கக் காலத்தில் காமராஜர் காங்கிரசின் வீழ்ச்சியை சரிபடுத்தப் புறப்பட்டு விட்டார். அப்போது காங்கிரஸ் சார்பில் பக்தவத்சலம் முதல்வராக நியமிக்கப்பட்டார். மீண்டும் இந்தித் திணிப்பிற்கெதிரான போராட்டம் தலை தூக்கியது.

  முதல்வர் பக்தவத்சலம் ஒரு முறை சொந்த விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு இரயிலில் புறப்பட்டு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே ரயிலில் பயணித்த சின்னச்சாமி என்ற இந்தித் திணிப்பு எதிர்ப்பு  இளைஞன்  முதல்வர் பக்தவத்சலம் அருகே சென்று தயவு செய்து இந்தியைக் கை விட்டு விடுங்கள் என்று கூறிய போது, இந்தியைக் கொண்டு வந்தே தீர வேண்டும் என்கின்ற நிலைப்பாடு கொண்ட முதல்வர் பக்தவத்சலம் சின்னச்சாமியிடம் கடும் கோபமுற்றவுடன், காவல் துறை அவரைப் பிடித்துச் சென்று விசாரித்து விட்டு அனுப்பியது. அதற்கு மறுநாள் காலை தன் நண்பர்களுக்கு "வீழ்க இந்தி, வீழ்க இந்தி" என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தை அனுப்பிவிட்டு, தீக்குளித்து மடிந்தான் சின்னச்சாமி. அந்த நாள் ஜனவரி 25. இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக மடிந்து போன தமிழர்களில் சின்னச்சாமி மூன்றாமவர். ஏற்கனவே முதல்கட்டப் போரில் 1937 களில் நடராசன் என்பவர் தந்தை பெரியாரோடு சிறையிலடைக்கப்பட்ட போது, கடும் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ராஜாஜிக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டால், நீங்கள் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள் என்று கூறிய போது, அதற்கு என் உயிரை விடுவதே மேல் என்று கூறி, சிறையிலே மடிந்தார் நடராசன். அதற்குப் பின்னான காலத்தில் தாளமுத்து சிறைக்காவலர்களால் துன்புறுத்தப்பட்டு இறந்தார்.  ஆக, முதலில் இரண்டு உயிர்கள் இந்தியை எதிர்த்து தன்னை மாய்த்துக் கொண்ட பின் மூன்றாவதாக தன்னை மாய்த்துக் கொண்டவன் தான் சின்னச்சாமி. சின்னச்சாமியின் உயிரிழப்புக்குப் பின் இந்தி திணிப்பு எதிர்ப்பானது மாணவர்களின் மத்தியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

   கல்லூரி மாணவர்கள் இந்தி திணிப்பை எதிர்க்கின்ற போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கலாயினர். போராட்டம் வெகுதீவிரமடைந்தது. மாணவர்கள் தங்களுக்குள் ஒரு குழுவை ஏற்படுத்தினர். அந்தக் குழுவில் முதலானவர்களீக எல்.கணேசன், பெ.சீனிவாசன்,துரைமுருகன், நாவளவன் முதலானோர் இடம்பெற்றனர். இக்குழு தீர்மானத்தின் படி மாநிலம் முழுவதும் இந்தித் திணிப்பை எதிர்த்து சுற்றுப் பயணம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. தஞ்சையில் அதற்கான ஏற்பாட்டைச் செய்தார் நடராசன்(சசிகலாவின் கணவர்).
மாணவக்குழுவஅன் முக்கியமானவர்களைக் கைது செய்ய காவல் துறை துரத்தியது. அவர்கள் தலைமறைவாயினர். அந்நேரத்தில் எல்.கணேசனுக்கும், பெ.சீனிவாசனுக்கும் இடையே தகவல்களை நான் கொண்டு சேர்க்கிறேன் என்று கூறிப் புறப்பட்டவர் தான் மாணவர் வை.கோபால்சாமி.

   மாணவர் குழு முதல்வரைச் சந்தித்து தங்களின் இந்தித் திணிப்பிற்கெதிரான கோரிக்கைகளை வைக்க முடிவு செய்தது. மாணவர் குழுவின் தலைவராக அரசியல் கட்சி சார்பற்ற ரவிச்சந்திரன் செயல்பட்டார். முதல்வரைச் சந்திக்கச் சென்ற மாணவர்கள் அவமதிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். அப்போது முதல்வர் பக்தவத்சலம் மட்டும் மாணவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தால், நூற்றுக்கும் மேலான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கும். முதல்வர் மாணவர்களை அவமதித்து அனுப்பியதால் போராட்டம் கடும்
தீவிரமடைந்தது. கல்லூரி மாணவர்களின் போராட்டங்களில் காங்கிரஸ்கார இளைஞர்கள்  புகுந்து பிரச்சனை செய்யாமல் இல்லை. அதனால் வன்முறை வெடித்தது. கல்லூரிகளுக்கு 1965 ஜன-24 முதல் பிப் 8 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிடலாமென பக்தவத்சலம் கணக்குப் போட்டார். விடுமுறையை கனகச்சிதமாக பயன்படுத்தியது கல்லூரி மாணவர் குழு. தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று, கல்லூரி மாணவர்களைத் தாண்டி பள்ளி மாணவர்களையும் போராட்டத்தில் இறக்கியது. கிராமங்களில் உள்ள இலக்கிய மன்றங்கள், நண்பர் வட்டாரங்கள் என அனைவருமே போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இளைஞர்கள் உயிரைத் துறந்தனர். பலர் போராட்டங்களின் போது காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாயினர். அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவென்றே அரசாங்கம் அறிவித்தது. முதல்வர் பக்தவத்சலம் இறந்தவர்களில் பலர் நோய்வாய்ப்பாட்டு இறந்தனர் என்று சாடினர். பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பக்தவத்சலத்துக்கு உறுதுணையாக இருந்தார்.

   இந்நிலையில் டெல்லியில் இருந்து ஒரு பெண் நடுவண் அமைச்சர் தமிழகம் வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு,   நல்லதொரு முடிவெடுக்கப் பிரதமரிடம் கூறுகிறேன் என்றார். பிரதமர் பெண் மத்திய அமைச்ணரைக் கடுமையாகச் சாடினர். அப்போது அந்தப் பெண் அமைச்சர் மக்களுக்குப் பிரச்சனை என்றால் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதமரை மீறிச் செல்வேன் என்றார் அந்தத் துணிச்சல் மிகுந்த பெண் மத்திய அமைச்சர் நேருவின் மகள் இந்திராகாந்தி.

    அதன்பின்னர் மீண்டும் மாணவர் குழுக்களின் தலைவர் ரவிச்சந்திரன் பக்தவத்சலத்திடம் தனியாகப் போய்ப் பேசி சமாதானம் ஆனார். மாணவர் குழுக்கள் கடுமையாக எதிர்த்தது. ரவிச்சந்திரன்ஙகுழுவில் இருந்து நீக்கப்பட்டார். பெ.சீனிவாசன் அக்குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

    அந்தப் போராட்டங்களைத் தாண்டி தேர்தல் வந்தது காங்கிரஸ் தமிழ்நாட்டில் படுதோல்வி அடைந்தது. காமராஜர் என்ளொரு சகாப்தம் கல்லூரி மாணவரான பெ.சீனிவாசனிடம் தோற்றுப் போனார். அப்போது சறுக்கி விழுந்த காங்கிரஸ் இன்னமும் தமிழ்நாட்டில் தலை தூக்க முடியவில்லை என்பது தனிக்கதை.

  1967 ல் அண்ணா முதல்ரானார். மாணவர் குழுக்களின் தலைவரான பெ.சீனிவாசன் அவர்களை அழைத்து அப்போதைய நிதி அமைச்சர் வீட்டில் வைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அண்ணா தலைமையில் சட்டமன்றம் கூடியது. தொடர்பு மொழியான ஆவ்கிலமும், தாய்மொழியான தமிழும் ஆட்சி மொழியாக இருக்கும் என சட்டமன்றத்தில் தீர்மானத்தை  மத்திய அரசை எதிர்த்து வடித்தெடுத்து விட்டு அண்ணா சொன்னார் "என்னாலானதை நான் செய்து விட்டேன், இனி நடுவண் அரசு தன்னாலானதை செய்து கொள்ளட்டும்" என்றார்.

    இந்திக்கு எதிரான போராட்டங்களை மாணவர்கள் மத்தியில் தலைமையேற்று நடத்திய மதிப்பிற்குரிய அய்யா செயல்வீரர் பெ. சீனிவாசன் அவர்கள் பிறந்த விருதுநகர் மாவட்டத்தஉத் தி.மு.க காரன் நான் என்கின்ற பெருமிதத்தோடு அய்யா.பெ.சீனிவாசன் அவர்களை மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் அனுசரிக்கின்ற தினமான இன்று வணங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.