Tuesday, June 2, 2015

தொண்டர்களின் ஒப்புயர்விலா தலைவர் அவர்

என்னுடைய வயது என்ன என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் என நினைக்கிறேன். உங்களுக்காக வேண்டுமானால் இன்னொரு முறை இங்கே நினைவுப்படுத்துகிறேன். அதாவது இன்னும் ஒரு நான்கு மாதங்களில் இருபத்தைந்தைத் தொடுகிறேன். இந்தச் சின்ன வயது தான் எனக்கு. நான் ஒன்றும் பெரிய வயதினன் இல்லை.

   என்னைச் சுற்றி பண பலமோ அரசியல் பலமோ ஆள் பலமோ என எதுவுமே இதுவரை இருந்ததில்லை. ஒரு சின்ன உர அங்காடியில் இந்த ராசபாளையம் நகரத்தின் ஒரு மூலையில் பகல் நேரங்களில் மூடை தூக்கியதில் கரை தோய்ந்த  ஒரு பழைய சட்டையுடனும் பல நேரங்களில் காலில் செறுப்பு கூட போடாமல் சைக்கிளில் நகரத்து வீதிகளில் அவ்வப்போது சுற்றிக் கொண்டிருக்கும் பணியினைச் செய்து கொண்டிருக்கும் எனக்கு அப்படியென்ன ஆள் பலம் இருக்கும் என்பதை நீங்களே எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    முகநூலில் தி.மு.க விற்காக பதிவுகள் போடுவதும், அவ்வப்போது வாய்ப்புள்ள  (வேலையில் விடுப்பு கிடைக்கின்ற) நேரங்களில் கழகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், அதற்காக என்னாலான பணியினைச் செய்வதும், எங்கள் சொக்கநாதன்புத்தூர் கிளைக் கழகத்தில் ஒரு துடிப்புமிக்க தி.மு.க கார இளைஞனாக வலம் வருவதும் தான் கழகத்திற்காக நான் செய்த பணிகள் என்றாலுங் கூட, என்னுடைய தாயும் தந்தையும் தி.மு.க விற்காக பல காலங்கள் உழைத்திருக்கிறார்கள், உழைக்கிறார்கள், உழைப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்களுடைய வளர்ப்பு தான் என்னை தி.மு.கழகத்தின் துடிப்புமிக்க இளைஞனாக வலம்வரச் செய்திருக்கிறது.

   இதுதான் நா(ங்கள்)ன் கழகத்திற்காக செய்த அளப்பரிய பணிகள் என்றால் அது மிகையாகாது. இதன் விளைவாக என்னுடைய தாயார் மட்டும் இராசை, ஒன்றிய கழகத்தின் சில பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தான் எங்கள் குடும்பத்தினை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரே தகுதி.

  இதையெல்லாம் தேவையில்லாத நேரத்தில் ஏன் இப்படிக் கதை விட்டுக் கொண்டிருக்கிறான் என்று நீங்கள் நினைப்பதற்குள் நான் விசயத்திற்கு வருகிறேன்.

   இப்படிப் பட்ட சூழ்நிலையில் வளர்ந்த நான்,   கடந்த செப் 13 அன்று என்னுடைய இருபத்தி நான்காம் பிறந்த நாளில் எப்படியேனும் தலைவர் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரோடு நின்று ஒரு புகைப்படம் எடுத்து வீட்டில் பெரிதாக பிரேம் போட்டு மாட்டவேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தோடு சென்னைக்குச் சென்றேன். போறது தான் போறோம்,,
அப்படியே இணையதள நண்பர்கள் சார்பாக கலைஞரின் பிறந்த நாளையொட்டி  நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற என்னுடைய கட்டுரையையும் தலைவர் கலைஞரிடம் சமர்ப்பித்து விடுவோம் என்று அதையும் எடுத்துச் சென்றிருந்தேன். கட்டுரைப் போட்டியினை நடத்தியவர்களோ பரிசு வழங்கியவர்களோ கூட தி.மு.க. வின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களோ, பிரபலமானவர்களோ கிடையாது அவர்களும் என்னைப் போன்ற எளிய தொண்டர்கள் தான்.

       ஆக, கலைஞரைச் சந்திக்க கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று விட்டேன். உடன் நம் கழக நண்பர்கள் தாம்பரம் சதீஸ், சிவகிரி தனுஷ்குமரன், சிவகாசியில் இருந்து ஒரு நண்பரென மொத்தம் நான்கு பேர் சென்றிருந்தோம். நாங்கள் சென்றவுடன் யார் நீங்க? யாரப் பாக்கனும் என வினவிக் கொண்டு கோபாலபுரத்துக் காவலாளி ஓடி வந்தார். நான் உடனே, பேஸ்புக்கில் தி.மு.க சார்பாக எழுதுகிறேன். இன்று எனக்குப் பிறந்த நாள் ஆதலால் தலைவரிடம் வாழ்த்துப் பெற வேண்டும் என்றேன்.

   உடனே, என்னுடைய பெயரைக் குறித்துக் கொண்டு, தலைவர் அனுமதி கொடுத்தால், யாராவது இரண்டு பேர் மட்டும் தான் உள்ளே வரவேண்டும் என்றார். எனக்குத் தலைவர் அழைப்பாரா,, அழைக்கமாட்டாரா,, என்கின்ற சந்தேகம் வேறு உறுத்திக் கொண்டே இருந்தது. ஏனெனில் எங்களுக்கு முன்னே ஒரு ஐம்பது பேர் வரைக்கும் அங்கே தலைவர் கலைஞரைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தனர். அவர்கள் எல்லாம் ஏதோ முக்கிய நிர்வாகிகள் போல அவர்களுடைய தோரணையிலே தெரியவந்தது. ஆதலால் அவர்களை மட்டும் தான் சந்திப்பாரோ, நம்மைச் சந்திக்கமாட்டாரோ என்று உடன் வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், தலைவர் வருகைக்கான செய்கைகள் தெரிந்தது. காவலாளிகள் அங்குமிங்கும் ஓடினர். பரபரப்பு தொற்றியது  கலைஞர் வந்து விட்டார்.
 
   எங்களுக்கு முன்னே குழுமியிருந்தவர்களில் இருவரை மட்டும் உள்ளே அழைத்திருப்பார் போல, அவர்கள் உள்ளே சென்றனர்.

    அடுத்து, உள்ளே இருந்து ஒரு குரல் "சீத்தாராமன்" என்றதும் ஓடினேன். என் உயிரான தலைவர் கலைஞரைப் பார்க்க ஓடினேன். எனக்கெல்லாம் இந்த வாய்ப்பு கிடைக்குமாயென்று பல நாட்கள் ஏங்கித் தவித்ததுண்டு. அதனால் தானோ என்னவோ இந்த வரிகளை எழுதுகையில் என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்குகிறது.

   தலைவர் கலைஞரின் அருகே நிற்க வைக்கப்பட்டேன். என்னை ஏறிட்டுப் பார்த்தார். பக்கத்தில் சென்றேன். "அய்யா எனக்குப் பிறந்த நாள்" என்றேன்.

  "வாப்பா, பிறந்த நாளா" என்றார் தலைவர் கலைஞர்.

    ஆமாம், என்று சொல்லி காலைத் தொட்டு வணங்கி, கையிலே வைத்திருந்த பழத் தட்டை பக்கத்திலே நின்ற உதவியாளர் வாங்க, கையிலே வைத்திருந்த கட்டுரையை "அய்யா, இது நான் உங்களைப் பற்றி எழுதி முதல் பரிசு பெற்ற கட்டுரை" என்றேன்.

   தன் கையிலே வாங்கிய கலைஞர், அதன் அத்தனை பக்கங்களையும் புரட்டிப் பார்த்து விட்டு, என்னை அண்ணாந்து பார்த்து தன் உதட்டை மடித்து பற்களுக்குக் கீழே வைத்துக் கொண்டு, "உச்" என்று ஒரு சத்தமிட்டார் பாருங்கள், அப்போதே என் உயிர் பிரிந்து விட்டது. இப்போதெல்லாம் நான் வெறும் பிணம் தான், அந்தத் தருணம் எனக்கு அப்படியொரு அளப்பரிய மகிழ்ச்சியைத் தந்தது.

   கலைஞர் என்பவர் சாதாரண மனிதரல்ல. தமிழக அரசியல் வரலாற்றினுடைய முக்கால் நூற்றாண்டு கால வரலாறு. அன்றைய தினம் அவர் இந்த எளிய தொண்டனைச் சந்திக்க மறுத்திருந்தால் கூட, நான் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டேன். சிங்கத்தை அதன் குகைக்குள் போய் பார்த்து விட்டோம் என்ற மகிழ்ச்சியோடு திரும்பியிருப்பேன். அதைக் கூட விட்டு விடலாம். நான் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு என்றதும், அதை விரித்துப் படித்துப் பார்த்தார் பார்த்தீர்களா! அது தான் அந்த நொடியில் நான் வியந்து நின்ற ஒன்று. என்னுடைய தகுதிக்கு நானெல்லாம் எழுதிய கட்டுரையை அவர் அப்படியே தன்னுடைய உதவியாளரிடம் கொடுத்து ஒரு மூலையோரத்தில் வைத்து விடுவார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் கலைஞர் அப்படிச் செய்யவில்லை. அவருக்கிருக்கின்ற வேலைப்பாடுகளில் அதையும் விரித்துப் படித்து, அவர் விழியசைவால் என்னை வாழ்த்தினார் பார்த்தீர்களா!

  "இவர் தான் கலைஞர். இவர் தான் தொண்டர்களின் ஒப்பற்ற தலைவர்"

  இந்த ஒற்றை உணர்விற்காகவே, என் வம்சம் முழுதும் கலைஞர் தான் எங்கள் தலைவர் எனக் கூவி, கருப்புசிவப்புக் கொடி பிடித்துக் கலைஞர் வாழ்க எனக் குரலெழுப்பும்.

    93 வயதிலும் தான் ஏறிப்பார்க்காத உயரமே இல்லை எனும் புகழைக் கொண்ட ஒரு தலைவர், 24 வயது சின்னக் கடைக்கோடித் தொண்டனுக்கும் இவ்வளவு பெரிய சகாப்தத்தைத் தர முடிகிறதென்றால் அது உலக வரலாற்றில் திராவிடப் பெருந்தலைவர் கலைஞரைத் தவிர  எவராலும் முடியாது.

   பெரியாருக்குப் பின்னால் அவர் இடத்தை பேரறிஞர் அண்ணா பூர்த்தி செய்தார். அண்ணாவிற்குப் பின்னால் அவர் இடத்தை திராவிடப் பெருந்தலைவர் கலைஞர் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கலைஞருக்குப் பின்னால் அவருடைய
வெற்றிடம் தான்.  தலைவனாகப்பட்டவன் இப்படித் தான் வாழவேண்டும் என்பதற்கு கலைஞர் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

    92 ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கிற கலைஞரே, என் குடும்பத்தின் ஆயுளில் ஒரு கால் பங்கைத் தருகிறேன் எடுத்துக் கொள்ளும். இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்!!

   வாழ்க கலைஞர்!!
   வாழ்க கலைஞர்!!
   ஓங்குக கலைஞர் புகழ்!!

Wednesday, April 8, 2015

நாகூர் ஹனீபா புகழ் ஓங்கட்டும்!!

இன்று முழக்குவது போல் இசையொலியை அன்று முதல் அழைக்காமலே வந்து,, என்றவுடன் கூட்டத்தில் சிரிப்பொலி ஆர்ப்பரிக்கிறது,, இசை முரசைத் தரவிருக்கும் நாகூர் ஹனீபா வுக்கும் வணக்கம் என தலைவர் கலைஞர் அவர்களின் இளங்கால பேச்சொன்றிலே கேட்கின்ற போது அய்யா ஹனீபா அவர்கள் மீது அவர் பாடிய பாடல்களைக் கேட்ட போதெல்லாம் வராத பாச உணர்வு அதைக்கேட்டது முதல் மேலோங்கியது.

   திருச்சி மாநாட்டிலே கொட்டித் தீர்த்த மழையில் வெள்ளக்காடாய்க் கிடந்த மாநாட்டுப் பந்தலுக்குள் கலைஞர் தன் வேட்டியை முழங்காலுக்கு மேலே ஏற்றிக் கட்டி வீறு நடை போட்டு வந்த போது தான் ஹனீபா "ஓடி வருகிறார் உதயசூரியன், எந்தன் உள்ளமெல்லாம் கொள்ளை போகவே ஓடி வருகிறார் உதயசூரியன்" என்று பாடலை முதன் முதலாகப் பாடிய போது ஒட்ட மொத்த மாநாட்டுப் பந்தலும் ஆர்ப்பரித்துப் போனதாய் எங்களூர்க் கழகத்தவரொருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

  இப்போதும் எங்கள் ஊர் கழக நிகழ்வுகளில், ஓடி வருகிறார் உதயசூரியன்,  உடன் பிறப்பே ஓடி வா,, ஆறிலும் சாவு நூறிலும் சாவு,, அண்ணா என்பதும் ஒருவரைத் தான், கற்பூரக் கனல் வார்த்தைக் கலைஞர் சொல்லட்டும் போன்ற பாடல்களை ஒலிபெருக்கியிலே ஒலிக்கவிட்டு, தெருவிலே வெள்ளுடை உடுத்தி வீராப்பு நடை போட்டு வருகின்ற போது எனக்கு கிடைக்கின்ற உற்சாகம் கழகத்தின் வேறெதிலும் கிடைப்பதில்லை.

     அதே போல, என்னைக் கவர்ந்த ஹனீபா வின் இன்னொரு பாடல் "இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை, என்ற பாடல் நான் என்னுடைய எட்டாம் வகுப்பை கோவில்பட்டி அருகே உள்ள சில்லாங்குளம் முத்துக்கருப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்ற ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கெல்லாம், குளித்துவிட்டு மைதானத்தில் வரிசையில் அனைவரும் ஒரு சேர வழிபாட்டுப் பாடலாக பாடிய பாடல் என்னை சிறுவயதிலேயே மிகவும் கவர்ந்தது. இன்னமும் அந்தப் பாடலை எங்கேனும் கேட்டால் எனக்கு அப்பள்ளியின் நினைவுகள் நிழலாடத் துவங்கி விடும்.

  இச்சீர் மிகு ரசிப்புத் தன்மை கொண்ட கழகப் பாடல்களையும், இறைவணக்கப் பாடல்களையும் பாடிய ஹனீபா வின் உடல் மறைந்து விட்டது. மறைந்தாலும் தன் பாடல்களின் மூலம் நீங்காப் புகழ் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசன், வாலியைப் போல அவரும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.

   சிம்மக்குரலோன் நாகூர் ஹனீபா புகழ் ஓங்கட்டும்.

Saturday, April 4, 2015

நடப்பது ஆட்சியல்ல, காட்சியே!!

கடந்த டிசம்பர் மாதம் இருபதாம் தேதி காலை பத்து மணிக்கு கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இராசபாளையம் திருவள்ளுவர் நகரைச் சார்ந்த சங்கர் என்பவரின் மகள் ஹன்சினி தனியார் மருத்துவமனை ஒன்றிலே அனுமதிக்கப்பட்டு உயிர் பிரிந்த போது, இராசபாளையத்தில் டெங்குக் காய்ச்சல் பரவியிருக்கிறதென்பதும், அதைத் தொடர்ந்து இருபத்தைந்துக்கும் அதிகமான குழந்தைகள் இறக்கப் போகின்றனர் என்பதும் இராசபாளையத்தில் வாழ்கின்ற எந்த மக்களுமே நினைத்துக் கூட பார்க்காத ஒன்று தான்.

Rajapalayam Dengueஅந்தக் குழந்தை இறந்த இரண்டாவது நாள் தான் தி இந்து நாளிதழில் "இராசபாளையத்தில் மர்மக்காய்ச்சல் குழந்தை பலி" என்ற தலையங்கத்தில் வந்த செய்தியைப் படித்த போது தான் அனைவருக்கும் கொஞ்சம் அச்சம் ஏற்பட்டது. அந்த செய்தி வந்த அதே நாளில் சத்திரப்பட்டி ரோடு ரயில்வே கேட் அருகே, ஒரு குடும்பம் இறந்த குழந்தையோடு சாலை மறியல் செய்த போது தான் ராசபாளையத்தில் என்ன நடக்கிறது என அனைவரும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கத் தொடங்கினோம்.

அதே வாரத்தில் மூன்று குழந்தைகள் பலியாயினர். இப்படியாகப் பலியாகிக் கொண்டிருந்த குழந்தைகளின் எண்ணிக்கை இருபத்தைந்தைத் தொட்டு இராசபாளையத்தையும் அதன் சுற்று வட்டார கிராம மக்களையும் நிலைகுலையச் செய்து விட்டது இந்த டெங்குக் காய்ச்சல்.

இராசபாளையத்தில் டெங்குக் காய்ச்சல் பரவுவதற்கான காரணமென்ன என ஆராய்ந்தோமேயானால், அங்கே முழுக்க முழுக்க குற்றவாளியாக நிற்பது இராசபாளையம் நகராட்சியும் அதன் நிர்வாகமும் தான். நகராட்சியின் நீர்நிலைத் தொட்டிகளை சரிவர சுத்தப்படுத்தாமையும், இராசபாளையத்திற்கு மேற்கே அய்யனார் கோவில் பகுதியில் இராசபாளையம் நகர முழுமைக்கும் குடிநீர் ஆதாராமாக விளங்கக் கூடிய நீர்த்தேக்கத்தை சரிவரப் பராமரிக்கமல் இருந்ததுமேயாகும். இன்னொன்றையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். திருவள்ளுவர் நகரைச் சார்ந்த ஹன்சினி என்ற டெங்குவிற்குப் பலியான குழந்தையின் வீட்டின் முன்னால் உள்ள விளையாட்டு மைதானம் முழுமைக்கும் பார்த்தீனியச் செடிகள் முளைத்து, பகல் பனிரெண்டு மணிக்குக் கூட பயங்கரமான கொசுத் தொல்லை இருந்தும் அதைப் பராமரிக்காமல் விட்டு விட்ட பினாமி அ.தி.மு.க அரசு நிர்வாகம் மட்டுமே இதற்கு முழுக் காரணமாகும்.

இப்படித் தொடர்ந்து குழந்தைகள் இறந்து கொண்டிருந்த போது, இந்த மாவட்டத்திலும் பினாமி அ.தி.மு.க அரசின் இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றார்களே, இந்தத் தொகுதிக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறாரே, அவர்களெல்லாம் எங்கே சென்றார்கள் என உங்களுக்கு ஏற்படக் கூடிய ஐயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினரும் ஆறு குழந்தைகள் இறந்து முடிந்திருந்த வேளையில், இதையெல்லாம் துளி கூட கண்டு கொள்ளாமல், தேவதானத்திலே உள்ள பெத்தனாட்சியம்மன் கோவிலுக்குத் தொண்டர்களுடன் பாலாபிசேகமும் பட்டாபிசேகமும் சிறப்பு வேள்வி பூஜையும் செய்து, சொத்துக் குவிப்பு வழக்கிலே பெங்களூர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, நூறுகோடி ரூபாய் அபராதமும் நான்காண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்ட ஜெயலலிதா விடுதலை பெற்று, மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வேண்டுமென்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அடடே,, என்னே அமைச்சர்களின் பணியென்று நீங்கள் வியந்து பாராட்டுவீர்களென நினைக்கிறேன்.

மடிகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருந்தது. ஒரு நாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இராசபாளையத்திற்கு வந்தார். அ.தி.மு.க வின் கொடி பறக்கும் கார்களின் எண்ணிக்கை இராசபாளையத்தில் அதிகமானது. நாங்கள் எல்லாம் இங்கே தான் இருக்கிறோம் தயவு செய்து பயப்படாதீர்கள் உங்கள் குழந்தைகள் இறந்து போனால், அதற்கு அரசாங்கத்தில் இருந்து நிதி கொடுத்து விடுவோம் என்கின்ற ரீதியாக கொசுவை ஒழிப்பதற்கும் மருத்துவ வசதியினை மேம்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை துரிதப்படுத்தாமல், ஊர்வலம் போகத் தொடங்கினர். அய்யோ அமைச்சர்களல்லாவா வருகிறார்களென டெங்குக் கொசுக்கள் ஓடி ஒளிந்து கொள்ளுமா என்ன? ஆனால் எத்தனை இறந்த குழந்தைகளின் குடும்பங்கள் அரசாங்க இழப்பீட்டு நிதியைப் பெற்றிருக்கின்றனர் என்பது முயலுக்குக் கொம்பு முளைத்த கதை தான்.

அதே போல இராசபாளையத்திலே உள்ள அதிகாரிகளும் அலுவலர்களும் மருத்துவர்களும் வேகமாக இயங்கத் தொடங்கினர். இராட்சத கிரேன் இயந்திரங்களைக் கொண்டு நகரின் பிரதான சாலைகளிலும், மக்கள் அதிகம் நடமாடும் வீதிகளிலும் உள்ள சாக்கடைக் கழிவுகளும், குப்பைகளும் அகற்றப்பட்டன. இப்படிச் செய்யப்பட்ட வேலைகளினால் ஒரே வாரத்தில் இராசபாளையம் நகராட்சியில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரக் கணக்கான மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டிருக்கிறது. இந்த ஒரு தகவலிலிருந்தே நகராட்சி நிர்வாகம் கடந்த மூன்றரையாண்டுகளாக எப்படிச் செயல்பட்டிருக்கிறது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். ஆனால் இந்தப் பணிகளினால் நகர் முழுவதும் ஐம்பது சதிவிகிதமே சுகாதாரம் செய்யப்பட்டிருக்கிறது என்றொரு தகவல் நகரமக்களிடம் இருந்து வந்து கொண்டே தான் இருக்கிறது.

வேலைகள் தான் முடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதே, உயர்ந்த மருத்துவக் குழுக்கள் எங்கள் நகருக்கு வந்து விட்டதே, இறப்புக்களின் எண்ணிக்கை குறைந்ததாயென்றால், பதிமூன்று பதினைந்தானது . பதினைந்து பதினெட்டானது, பதினெட்டு இருபத்தி இரண்டு ஆனது.

இவையெல்லாம் அரசு மருத்துவமனை சொல்கின்ற கணக்குகளே. இது போக தனியார் மருத்துவமனைக்குச் சென்று அங்கே மடிந்து போன பிஞ்சுகளின் பெயர்களெல்லாம் இங்கே கணக்கில் இல்லை.

மக்களும் ஒரு புறம் தங்களின் எதிர்ப்புகளை மிகக் கடுமையாகப் பதிவு செய்து கொண்டே இருந்தனர். இப்படியாக இராசபாளையம் சங்கரன் கோவில் முக்கு பகுதியில் இறந்த குழந்தையின் உறவினர்கள் செய்த சாலை மறியலில் போலிஸ்காரர்கள் பெண்களின் பிடரியைப் பிடித்து இழுத்து அடித்ததும், அதைப் பார்த்து கொந்தளித்துப் போன இளைஞரொருவர் தெற்குக் காவல் நிலைய இன்ஸ்பெக்டரை சட்டையைப் பிடித்து அடிக்கப் பாய்ந்ததும், அந்த இளைஞரை காவல் துறையினர் நைய்யப் புடைத்ததும் அனைவரும் அறிந்ததே.

பின்பொரு நாள் யூனியன் அலுவலகம் அருகே தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் ஒன்று கூடி நகரமே திரும்பிப் பார்க்கின்ற வண்ணம் மாபெரும் சாலை மறியலொன்றை இயங்கயியலாத பினாமி அரசாங்கத்தைக் கண்டித்து செய்து, இதனால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுக் கிடந்ததென்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் இதைச் செய்தியாக்காமல் மூடி மறைத்து அரசாங்கத்திற்குப் பெரும்துணையாக இருக்கும் ஊடகங்கள் தங்கள் நடுநிலையின் நிலையை அனைவரும் அறியும் வண்ணம் நடந்து கொண்டது தனிக்கதை.

இறுதியில் குளிர்பனியின் தாக்கம் குறைந்து போனதால் டெங்குக் காய்ச்சலின் வீரியமும் குறைந்து போனது. டெங்குக் காய்ச்சல் என்பது ஒரு சீசன் போல வந்து போன பின்னர் இங்கே வைரஸ் காய்ச்சல் தொற்றிக் கொண்டது.

வைரஸ் காய்ச்சலுக்கும் டெங்குக் காய்ச்சலுக்கும் உரிய உயர்தர மருத்துவத்தைத் தராமல், இராசபாளையம் காந்தி சிலை அருகே உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையை வெள்ளையடித்து, வண்ண அலங்கார விளக்குகள் தொங்க விட்டு, வண்ணக் கொடிகள் அழகாக பறக்க விட்டு, இன்னும் சொல்லப் போனால் அலங்காரத் தோரணைத் துணிகளையும் கூட தொங்க விட்டு அரசு மருத்துவமனையை அலங்கார மருத்துவமனையாக, ஏதோ கல்யாண வீடு போல ஆக்கி வைத்திருக்கிறார்கள்.

தமிழக அரசாங்க வரலாற்றிலே முதல்முறையாக இருபத்தைந்துக்கும் அதிகமான குழந்தைகளைப் பலி கொண்ட, காப்பாற்ற இயலாத அரசு மருத்துவனை இவ்வளவு அலங்காரம் செய்யப்பட்டிருப்பதேன்???

நாங்கள் சிறப்பாகத் தான் செயல்பட்டிருக்கிறோம். இங்கே வந்த எல்லாக் குழந்தைகளும் காப்பாற்றப்பட்டு விட்டனர். ஆக நாங்கள் நல்லாட்சி தான் நடத்திக்கொண்டிருக்கிறோம், பார்த்தீர்களா,, அரசு மருத்துவமனை எவ்வளவு அலங்காரமாக ஜொலிக்கிறது என்று காட்சிப்படுத்த மட்டுமே இப்படி அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்த ராசபாளையம் மக்களை அ.தி.மு.க அரசாங்கம் எவ்வளவு முட்டாளாக்குகிறது பார்த்தீர்களா!!

இதுதான் அ.தி.மு.க அரசாங்கத்தின் இன்றைய லட்சணம். உரிய மருத்துவத்தைக் கொடுத்து நோயாளியாகிக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றுவதை விட்டு, இப்படியெல்லாம் மருத்துவமனையை அலங்காரம் செய்து, மக்களை மனநோயாளியாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல பிரச்னைகளுக்கான தீர்வுகள் இப்படியே காட்சிப்படுத்தப்படுகின்றன. முறையான உரிய தீர்வுகள் இல்லை. நடப்பது ஆட்சியல்ல, வெறும் காட்சி தான் என்பது இந்த ஒரு விசயத்தில் இருந்தே தமிழ்நாட்டு மக்களுக்குப் புலப்படுமென உறுதியாக நம்புகிறேன்.

மாற்றங் காண வேண்டியது மக்கள் கையில் தான் உள்ளது.

Friday, March 20, 2015

தாலி அறுப்புப் போராட்டம்

திராவிடர் கழகம் தாலி அறுப்புப் போராட்டமெனும் நிகழ்வை வருகின்ற ஏப்ரல் பதினான்காம் தேதி நடத்துமென்று தி.க தலைவர் மதிப்பிற்குரிய கி.வீரமணி அவர்கள் அறிவித்திருக்கிறார்.

தாலி அறுப்புப் போராட்டமென்றால் ரோட்டிலே நடந்து சென்று கொண்டிருக்கின்ற பெண்களைப் பலவந்தமாகப் பிடித்து வந்து ஏதோ கொள்ளைக்காரனைப் போல கழுத்திலே கிடக்கும் தாலியை அறுத்துக் கொண்டு ஓடுவதன்று. நீங்கள் இவ்வளவு தூரம் கொதித்தெழ.

தன் மனைவியின் கழுத்திலே தானே கட்டிய தாலியை தன் மனைவியின் விருப்பத்தோடு பகுத்தறிவாளர்கள் நிரம்பிய சபையில் அனைவரின் சம்மதத்தோடும் கணவனே அந்தத் தாலியை அறுத்தெறிவது தான் தாலி அறுப்புப் போராட்டம். இதனால் அவர்கள் இருவருக்குள் இடையேயான அன்போ பாசமோ உறவில் உள்ள நெருக்கமோ என எதுவும் குண்டூசி முனையளவு கூட குறைந்து விடப்போவது கிடையாது.

இது அவரவர் சுய விருப்பம். தாலியை அறுக்கப் போகின்ற கணவனுக்கும் அதற்கு கழுத்தை நீட்டுகின்ற மனைவிக்கும் இடையேயான பிரச்னை. இதில் மற்றவர்கள் தலையிட்டுக் கருத்துக் கூற எவ்வித அதிகாரமும் கிடையாது. அவ்வளவு தான் தாலி அறுப்புப் போராட்டம்.

மிக முக்கியமான நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விசயம் என்னவெனில் தாலி அறுப்புப் போராட்டத்தை தி.க தலைவர் கி.வீரமணி அறிவித்திருக்கிறார். அவர் அதை நடத்தப் போகிறார். இப்போராட்டத்தை தி.மு.க வோ அல்லது கலைஞரோ, மு.க.ஸ்டாலினோ அறிவிக்கவில்லை, நீங்கள் தி.மு.க வையும் கலைஞரையும் ஸ்டாலினையும் அவங்க பொன்டாட்டி தாலியை அறுக்கச் சொல்லுடா பாப்போம் என்று பேசுவதற்கு.

அப்படி நீங்கள் இந்த போராட்டத்திற்காக தி.மு.க வை விமர்சிக்க வேண்டுமென்றால், ஏன் தி.மு.க வோடு நிறுத்தி விட்டீர்கள், அ.தி.மு.க வை விமர்சியுங்கள், ம.தி.மு.க வின் வை.கோ வை கேள்வி கேளுங்கள். இன்னும் சொல்லப்போனால் லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்திரனைக் கூட நீங்கள் கேள்வி கேட்கத் தான் வேண்டும்.ஏனெனில் தமிழ்நாட்டிலுள்ள அத்துனை திராவிடக் கட்சிகளுக்கும் தாய்க் கழகம் தி.க தானே.

அது கூட இருக்கட்டும். தாலி அறுப்புப் போராட்டம் கலாச்சாரத்திற்கே இழிவென இவ்வளவு கலாச்சாரம் பேசுகின்ற நீங்கள், முதலில் தாலி கட்டின பொன்டாட்டியை வைத்துக் காப்பாற்றக் கூட வக்கில்லாத ஆர்.எஸ்.எஸ். உண்டாக்கிய ரோபோவான இந்தியப் பிரதமர் மோடியைப் போய் முதலில் கேள்வி கேளுங்கள்.

Thursday, March 19, 2015

வினோத்ராயை என்ன செய்யலாம்?

தமிழ்நாட்டு இளைஞர் கூட்டமெல்லாம், அய்யோ,, என் நாட்டு வளங்களை எல்லாம் ராசாவும் தி.மு.க வும் சேர்ந்து திருடிச் சென்று விட்டது. இவர்கள் தமிழர்களென்பதால் எங்கள் நாட்டின் வெளி மாநிலங்களில் நாங்கள் செல்கின்ற போது, எங்களைத் தமிழர்கள் என்று சொல்வதற்கு கூட வெட்கமாக இருக்கின்றது என்று புலம்பித் தள்ளினார்கள்.

அதற்குக் காரணமான 2G ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் விட்டதில் ஆ.ராசா 1.76 லட்சம் கோடி ஊழல் செய்து விட்டாரென்று இந்தியத் தணிக்கைத் துறை அதிகாரி வினோத்ராய் அறிவித்தது தொடர்பான வழக்கு இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. ஆனால் இந்த ஆண்டு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை தகவல் தொழில்நுட்ப ஆணையம் ஏலம் விட்டதில் இருந்து வினோத் ராய் எவ்வளவு பெரிய பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார் என்பது நிரூபணமாகி விட்டது.

இக்குற்றச்சாட்டால் ஆ.ராசாவையும் தி.மு.க வையும் தாண்டி எத்தனையோ தமிழ் இளைஞர்களின் அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் காரணமான வினோத் ராய்க்கு, என்னைப் பொறுத்தவரை அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுத்தால் கூட அது குறைவு தான்.

"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு"